திருவண்ணாமலையில் மகா தீபம்-அரோகரா முழக்கத்துடன் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலை மலை உச்சியில் மாலை ஆறு மணி அளவில் மகாதீபம் ஏற்பட்டது. தீபத்தை காண திரண்டிருந்த இருபது லட்சம் பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் முக்கிய அம்சமான மகாதீபத் திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இன்று அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் மகாதீபம் ஏற்றப்படும் முன்னதாக பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
மகாதீப தரிசனம்
சரியாக 5.56 மணி அளவில் அர்த்தநாரிஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி நடனமாடினார். அப்போது காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வந்து கொடி மரத்தின் முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்த்த பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு அவைகளை கொண்டு உயர்த்தி காட்டினர் இதன் பின்னர் அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் 2668 அடி உயர மலை மீது அமைக்கப்பட்டிருந்த கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த 20 லட்சம் பக்தர்கள் உணர்ச்சிப் பெருக்கில் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையானுக்கு அரோகரா என பக்தி பரவசத்தில் முழக்கமிட்டனர்.
இதன் பின்னர் கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகள் ஒளிர்ந்தன. வான வேடிக்கைகள் விண்ணை அலங்கரித்தன. இந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பக்தர்களின் கூட்டம் அலைமோதியதை ஒட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.