முல்லை பெரியாறு பிரச்சனையை பெரிதாக்கியது கேரள கிறிஸ்தவ காங்கிரஸ்: ராம.கோபாலன்
சென்னை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையைப் பூதாகாரமாக்கி, மக்களிடையே பிளவையும், சபரிமலை பயணத்தைச் சீர்குலைக்கவும் சமூக விரோத சக்திகள் சதி செய்கிறார்கள் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவிலும் தமிழகத்திலும் சில இடங்களில் மக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இத்தகைய செயல்களைப் புரிந்தோரை மாநில அரசுகள் கடுமையாக தண்டிக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையைப் பூதாகாரமாக்கி, மக்களிடையே பிளவையும், சபரிமலை பயணத்தைச் சீர்குலைக்கவும் சமூக விரோத சக்திகள் சதி செய்கிறார்கள் என்று இந்து முன்னணி கருதுகிறது.
இதற்குச் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகள் துணை போகின்றன. இது சம்பந்தமாக தமிழக முதல்வர் அறிக்கையை இந்து முன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது.
கர்நாடகாவில் திருவள்ளுவர் சிலை வைப்பதில் இதுபோன்ற பதட்டத்தை ஏற்படுத்திய சமூக விரோதிகள் நடத்திய அராஜகத்தை நாம் மறந்திருக்க முடியாது.
முல்லைப் பெரியாறு பிரச்சனையைப் பெரிதாக்க முனைந்தது கேரள கிறிஸ்தவ காங்கிரஸ் எனும் மாணிக் காங்கிரஸ் என்பது தெரிய வருகிறது. இரு மாநிலத்தவர்களுக்குள்ளும் சண்டையை, விரோதத்தை உருவாக்கத் திட்டமிட்ட சதி நடக்கிறது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐயப்பன் கோயிலில் ஒரு பெண் நுழைந்ததாகவும், அதனால் ஆலயம் கலங்கப்பட்டதாகவும் பரபரப்பை ஏற்படுத்தினர். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, சென்ற ஆண்டு பொதுமக்கள் நடந்துவரும் பாதையில் வாகனத்தை இயக்க அனுமதித்ததின் விளைவாக ஏற்பட்ட விபத்தில் கூட்ட நெரிசலில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த வழக்கில், தேவையில்லாமல் மகர ஜோதி இயற்கையா? செயற்கையா என நீதிமன்றம் தலையிட்டது.
இதனையெல்லாம் புறந்தள்ளி ஐயப்பன் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட பக்தர்கள், உலகம் முழுவதிலும் இருந்து இனம், மொழி, நாடு இவற்றைக் கடந்து, கோடிக்கணக்கானவர்கள் இந்தப் பக்திப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். இதனைத் தடுக்கவே முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளார்கள்.
மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் கூட்டத்தினர் சில நூறு பேர்கள் தான். இவர்களுக்கு மக்களின் ஆதரவோ, மதிப்போ கொஞ்சமும் கிடையாது. இரு மாநிலத்திலும் கோடிக்கணக்கான மக்கள் அமைதியாக, பொறுமையாக இருக்கிறார்கள். இந்தச் சிறு நரிக் கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்கக்கூடாது. தமிழக, கேரள அரசுகள் இந்த கூட்டத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.
ஐயப்ப பக்தர்கள் வழிபாடு நடத்த உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்து தரவேண்டும். மக்களைப் பிளவுபடுத்தும் சமூக விரோத சக்திகளைக் கண்காணித்துக் கைது செய்ய உரிய நடவடிக்கைகளை இரு மாநிலக் காவல்துறையும் எடுக்க வேண்டும்.
லட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் பக்திப் பயணத்தின் பாதியில் இருப்பதால் அவர்களுக்கு உணவு, தங்குமிட பாதுகாப்பை அரசுகள் செய்து தரவேண்டும். பயணத்தை மேற்கொள்வது தடுக்கப்பட்டால் மகரஜோதி சமயத்தில் பல கோடி பக்தர்கள் வர நேரிடும். இதனையும் அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் பக்தர்கள் தங்கு தடையின்றி சென்று வர, தேவைப்பட்டால் துணை ராணுவப்படையை மத்திய அரசு பாதுகாப்பிற்கு அனுப்பி வைக்கவேண்டும்.
நடுநிலையான ஊடகங்கள் பாரதத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு எதிராகச் செயல்படும் தேச விரோத சக்திகளைத் தோலுரித்துக் காட்டிட முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு ராம.கோபாலன் கூறியுள்ளார்.