சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் ரூ.77.72 கோடியை எட்டியது
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு வருமானம் 42 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த 28 நாட்களில் சபரிமலையின் மொத்தம் வருமானம் ரூ.77.72 கோடியை தாண்டி உள்ளது.
இது குறித்து சபரிமலை தேவசம்போர்டு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகின்றது. கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் 27 தேதி (டிசம்பர் 13ம் தேதி) வரை ரூ.77.72 கோடி வருமானம் கிடைத்து உள்ளது. இதே நாட்களில் கடந்த ஆண்டு ரூ.58.78 கோடி மட்டுமே வசூலானது. இதன்மூலம் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு ரூ.18.94 கோடி அதிக வருமானம் கிடைத்து உள்ளது.
கடந்த ஆண்டை விட அப்பம், அரவணை, பிரசாதம் விற்பனை, காணிக்கை உள்ளிட்டவை கிடைக்கும் தொகை இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு மண்டல பூஜையின் முதல் 27 நாட்களில் அப்பம், பிரசாதம் விற்பனை மூலம் ரூ.5.36 கோடி வசூலானது. ஆனால் இந்த ஆண்டு அப்பம், பிரசாதம் விற்பனை வசூல் ரூ.7.25 கோடி வருமானம் கிடைத்து உள்ளது.
இந்த ஆண்டு அரவணை விற்பனையின் மூலம் ரூ.33.68 கோடி வசூலாகி உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ரூ.24.28 கோடி மட்டுமே வசூலானது. அதேபோல கடந்த ஆண்டு ரூ.21.65 கோடி காணிக்கையாக வசூலானது. ஆனால் இந்த ஆண்டு காணிக்கை வருமானம் ரூ.26.64 கோடியை எட்டி உள்ளது.
இதேபோல பிற வழிப்பாடுகளின் மூலம் கிடைக்கும் வருமானமும் கடந்த ஆண்டும் விட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.