புதுச்சேரியை புரட்டிப் போட்டுப் போன தானே புயல்- நகரமே வெள்ளக்காடானது- 2 பேர் பலி
புதுவை கடற்கரை அருகே இன்று காலை தானே புயல் கரையைக் கடந்தது. இதன் காரணமாக புதுவையிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் பலத்த சூறைக் காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
புயல் காரணமாக புதுவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நகரமே வெள்ளக்காடாகியுள்ளது. புதுவையில் வீசிய மிக பலத்த சூறாவளிக் காற்றால் நேற்று இரவு முதல் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
புதுச்சேரி கடற்கரைப் பகுதி உள்பட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் முற்றிலும் இல்லை. அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். நகரின் அனைத்து் சாலைகளிலும் மரங்கள், மின் கம்பங்கள் பெயர்த்து எறிந்து போர்க்கள பூமி போல காணப்படுகிறது புதுவை.
அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. எந்தக் கடையும் திறக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்து கிடக்கின்றன.
சூறைக் காற்று மிகப் பலமாக இருந்ததால் ராஜ உடையார் தோட்டம் என்ற இடத்தில் வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்து அதில் சிக்கி அருள்ராஜ் என்பவர் உயிரிழந்தார். அதேபோல தாவீத் பேட்டையில் வீட்டின் சுவர் இடிந்ததில், ஜான் ஜோசப் என்பவர் உயிரிழந்தார்.
கடல் அலைகள் மிகக் கடுமையாக உள்ளன. தொடர்ந்து அங்கு கன மழை பெய்து கொண்டிருக்கிறது. காற்று சற்று வேகம் குறைந்து காணப்படுகிறது. இரவு முழுவதும் வீசிய பலத்த புயல் காற்றால் மக்கள்யாருமே இரவில்தூங்கவில்லை. என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் விடிய விடிய முழித்துக் கொண்டிருந்தனர்.
புதுச்சேரியில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக் காற்று வீசியது. புயலைத் தொடர்ந்து அங்கு இதுவரை 15 செமீ மழை பெய்துள்ளது.
கன மழை மற்றும் சூறைக் காற்று காரணமாக சென்னை-புதுவை-கடலூர் இடையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்து கிடக்கின்றன. இவற்றை அகற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
புதுவை மாநகரின் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் முற்றிலும் தொடர்பிழந்து காணப்படுகிறது.
விழுப்புரத்தில் ஒருவர் பலி:
விழுப்பரம் மாவட்டத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அங்குள்ள சங்கராபுரத்தில் மரம் விழுந்து ஒருவர் பலியானார். வானூர்- மரக்காணம் பகுதியில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதில் சிலர் காயம் அடைந்தனர்.