பாக். பிரதமர் கிலானிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்: 19ல் நேரில் ஆஜராக உத்தரவு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் கிலானி நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வரும் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உள்பட பல தலைவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை அந்நாட்டு அரசு விசாரணைக்கு எடுக்காமல் வழக்கை முடித்துவிட்டது. அந்த வழ்ககுகளை எல்லாம் மறுபடியும் விசாரணைக்கு எடுக்குமாறு உச்ச நீதி்மன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஜனவரி 16ம் தேதி அதாவது இன்றுக்குள் அந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்குமாறு அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.
அந்த கெடு இன்றுடன் முடிகிறது. இருப்பினும் அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ஊழல் வழக்குகளை விசாரணைக்கு அரசு எடுக்காதது குறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசராணைக்கு வந்தது. வழக்கு விசாரித்த நீதிமன்றம் பிரதமர் கிலானிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் வரும் 19ம் தேதி நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு ராணுவம் தனது ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்வதாகவும், தனகது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள உதவுமாறும் அதிபர் சர்தாரி அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம் வெளியானது குறித்த வழ்ககு விசாரணையும் இன்று துவங்கியுள்ளது.
இதற்கிடையே அந்த கடிதம் வெளிச்சத்திற்கு வரக் காரணமாக இருந்த பாகிஸ்தானிய-அமெரிக்க தொழில் அதிபரான மன்சூர் இஜாஸ் இன்று பாகிஸ்தானுக்கு வந்து இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் கொடுப்பதாக இருந்தது. ஆனால் விசா பிரச்சனையால் வர முடியவில்லை என்றும், வரும் 25ம் தேதி வரை தனக்கு காலஅவகாசம் தருமாறும் அவர் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.