ருஷ்டியின்றி துவங்கிய ஜெயப்பூர் இலக்கிய விழா
பிரபல பிரிட்டிஷ் இந்திய எழுத்தாளரான சல்மான ருஷ்டி இன்று (20ம் தேதி) முதல் 24ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் கலந்து கொள்கிறார் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத ருஷ்டியின் விசாவை ரத்து செய்யுமாறு இஸ்லாமிய மத அமைப்பான தாரூல் உலூம் தியோபான்ட் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் அனுப்பியது.
மேலும் ருஷ்டி ஜெய்ப்பூர் வருவதை ராஜஸ்தான் மாநில மக்களும் விரும்பவில்லை என்று அம்மாநில முதல்வர் கெஹ்லாட் தெரிவித்தார். இதையடுத்து ருஷ்டி சத்தமில்லாமல் வந்து இலக்கிய விழாவில் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்று ஜெயப்பூரில் இலக்கிய விழா துவங்கியது. ஆனால் ருஷ்டி வரவில்லை. தான் வராததற்கான காரணத்தை அறிக்கையாக அனுப்பி வைத்திருந்தார். அது துவக்க விழாவில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.
இதற்கிடையே ருஷ்டி டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
ஜெயப்பூருக்கு வர முடியாதது மிகவும் வருத்தமாக உள்ளது. மும்பை மாபியா டான் 2 அடியாட்களிடம் ஆயுதங்கள் கொடுத்து நான் இந்தியா வந்தால் என்னைக் கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளாராம். அதனால் நான் விழாவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.