சிறந்த தமிழ் நூல்களுக்கான நிதியுதவி ரூ.50,000க உயர்வு: ஜெயலலிதா உத்தரவு
சென்னை: தமிழில் சிறந்த நூல்கள் எழுதுபவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அரசு வழங்கி வரும் நிதியுதவியை ரூ.25,000ல் இருந்து ரூ.50,000க உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
உலக மொழிகளுள் பழமையும், இலக்கிய இலக்கண வளமும் வாய்ந்த மொழி தமிழ் மொழி. தமிழ் மொழியில் பல்வேறு இலக்கிய செறிவு நிறைந்த நூல்கள் உள்ளன. பல்வேறு இலக்கிய நூல்கள் நாள்தோறும் அச்சிடப்பட்டு வருகின்றன.
சிறந்த நூல்களை படைப்பவர்களுக்கு, தமிழ் மொழிவளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் நிதயுதவி அரசால் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் 25,000 ரூபாய்க்குள் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர். தேர்ந்தெடுக்கப்படும் நூல்களுக்கு நிதியுதவியாக 25,000/-ரூபாய் அல்லது எழுதுப்பொருள் அச்சகத் துறையின் மதிப்பீட்டுத் தொகையில் 60 விழுக்காடு, இதில் எது குறைவானதோ, அத்தொகை வழங்கப்படும்.
சிறந்த இலக்கிய நூல்கள் தமிழ் மொழியில் அதிக அளவில் வெளிவருவதை மேலும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்; ஏழ்மை நிலையில் உள்ள எழுத்தாளர்கள் ஏற்றம் பெறவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், நடைமுறையில் இந்நிதியுதவி திட்டத்திற்கான வருமான வரம்புத் தொகை மிகவும் குறைவாக இருப்பதையும், அச்சகத் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப முன்னேற்றத்தினால், நூல்கள் அச்சிடுவதற்கான செலவினம் அதிகரித்துள்ளதையும், நூல்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி குறைவாக இருப்பதையும், பெருமளவு நூலாசிரியர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாத நிலை உள்ளதையும் கருத்தில் கொண்டு தமிழில் சிறந்த நூல்களுக்காக வழங்கப்படும் நிதியுதவியினை 25,000/-ரூபாயிலிருந்து 50,000/- ரூபாயாக உயர்த்தவும், இத்திட்டத்தின் மூலம் நிதியுதவி பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் வருமான வரம்பை 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட அரசின் நடவடிக்கைகளினால் ஏழ்மையில் உள்ள எழுத்தாளர்கள் ஊக்குவிக்கப்பட்டு, அவர்களுடைய நூல்கள் பதிப்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.