மன நலம் பாதித்த வாலிபர் பஸ்ஸை தாறுமாறாக ஓட்டியதில் 9 பேர் பலி-40 வாகனங்கள் சேதம்!
புனே:புனே நகரில் இன்று காலை அரசு பேருந்தை மன நலம் பாதித்த ஒருவர் கடத்திச் சென்று தாறுமாறாக ஓட்டிச் சென்றதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 40 வாகனங்கள் பெரும் சேதமடைந்தன.
படுகாயமடைந்த 30 பேர் 3 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு மினி போர் போல இந்த காட்சி இருந்தது. இதனால் புனே நகரமே பெரும் பரபரப்பில் மூழ்கியுள்ளது.
இன்று அதிகாலையில், 30 வயதான சந்தோஷ் மனே என்பவர் ஸ்வார்கேட் பஸ் டிப்போவுக்கு வந்தார். அவர் மன நலம் சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. அப்போது ஒரு பஸ் தயார் நிலையில் இருந்தது. ஆனால் டிரைவர் இல்லை. இதையடுத்து அந்த பஸ்சில் ஏறிய சந்தோஷ், எடுத்து ஓட்டத் தொடங்கினார். படு வேகமாக ஓட்டி வந்த அவர் டிப்போவை விட்டு வெளியேறி இஷ்டப்படி ஓட்ட ஆரம்பித்தார். இதில் பஸ் டிப்போவுக்குள்ளேயே 2 பேர் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புனே நகரின் முக்கியப் பகுதிகளில் தாறுமாறாக அவர் பஸ் ஓட்டிச் சென்று நகரையே ஸ்தம்பிக்க வைத்தார். காலை 8 மணியளவில் அவர் பள்ளிக் குழந்தைகள், அலுவலகம் போவோர் என மக்கள் நடமாட்டம் அதிகரித்த ஆரம்பித்த வேளையில் தாறுமாறாக ஓட்டிச் சென்றதால் மக்கள் சிதறி ஓடினர்.
மேலும் கிட்டத்தட்ட 16 கிலோமீட்டர் தொலைவுக்கு ராங் சைடிலேயே அவர் படு வேகமாக பஸ்ஸை ஓட்டியதால் ஏகப்பட்ட பேர் சிக்கினர். பல வாகனங்கள், பாதசாரிகள் என பலரும் சிக்கியதால் புனே நகரமே அல்லோகல்லப்பட்டது.
ஒரு வழியாக அந்த மனிதர் நிலையம் தியேட்டர் அருகே போய் பஸ்ஸை நிறுத்தினார். அவரைப் பிடிக்க போலீஸார் துப்பாக்கி சகிதம் அங்கு முற்றுகையிட்டனர். அவரை சுட்டுப் பிடிக்க முயற்சித்தனர். இருப்பினும் அந்த நபர் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காததால் சுட வேண்டிய நிலைமை ஏற்படவில்லை.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. ஆட்டோ, டூவீலர் என ஏகப்பட்ட வாகனங்கள் இதில் அக்கம்.
அதிர்ஷ்டவசமாக பஸ்சில் யாரும் இல்லை. இருந்திருந்தால் மிகப் பெரிய அசம்பாவிதத்தை அந்த நபர் ஏற்படுத்தியிருப்பார் என அஞ்சப்படுகிறது.