புயல் எதிரொலி: கடலூர் மாவட்டத்தில் +2 செய்முறை தேர்வு தள்ளிவைப்பு
சென்னை: தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் பிளஸ் டூ செய்முறைத் தேர்வுகளை 6 நாட்கள் தள்ளிவைத்து அரசுத் தேர்வுகள் இயக்கம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி செய்முறைத் தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும்.
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த ஆண்டு சுமார் 9.63 லட்சம் மாணவ-மாணவியர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். அதில் தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் மட்டும் 26,000 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 2ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்ட மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்த வசதியாக செய்முறைத் தேர்வுகளை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று கடலூர் மாவட்டத்தில் மட்டும் செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்த அரசுத் தேர்வுகள் இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
தானே புயலால் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அறையாண்டுத் தேர்வுகள் முடிந்து மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 19ம் தேதி தான் திறக்கப்பட்டன. புயலால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மாவட்டமே இருளில் மூழ்கியது. இதில் குடியிருப்புகள் மற்றும் பள்ளிகளுக்கு முதலில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் 29ம் தேதி தான் மாவட்டம் முழுவதும் மின் இணைப்புகள் கொடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சில கிராமப்புற பகுதிகள் இன்னும் இருளில் தான் உள்ளன. அங்கு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அந்த பகுதிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி மின் இணைப்பு வழங்கப்படும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்முறைத் தேர்வுகளை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று தான் செய்முறைத் தேர்வுகள் 6 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.