கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ் சகோதரர் சீனு கவுண்டர் கைது-ராமதாஸ், அன்புமணியும் கைதாவார்களா?
கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது திண்டிவனம் தொகுதியில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் போட்டியிட்டார். அப்போது மே 8ம் தேதி திண்டிவனத்தில் பெரும் வன்முறை மூண்டது.
0க்கும் மேற்பட்ட பாமகவினர் கைகளில் ஆயுதங்களுடன் சி.வி.சண்முகம் வீட்டுக்குள் புகுந்து கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர். சி.வி.சண்முகத்தை வெட்டப் பாய்ந்தனர். அப்போது குறுக்கே புகுந்து அவரது உதவியாளர் முருகானந்தம் காப்பாற்ற முயன்றார். அப்போது அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றது அக்கும்பல்.
இந்தக் கொலை தொடர்பாக ரோசனை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ராமதாஸின் அண்ணன் சீனு கவுண்டர், ராமதாஸின் மருமகன் பரசுராமன், உறவினர்கள் பார்த்திபன், என்.ஆர்.ரகு, பாமக வேட்பாளராகப் போட்டியிட்ட கருணாநிதி ஆகியோர் மீது கொலை வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் பின்னர் வந்த திமுக ஆட்சியில் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட ராமதாஸ் குடும்பத்தினர் 7 பேர் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக வேறு 14 பேரின் பெயர்களை சேர்த்து விட்டனர்.
இதை எதிர்த்து சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை கடந்த அக்டோபர் 29ம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
சி.வி.சண்முகம் தொடர்ந்த இந்த வழக்கால் கோபமடைந்துதான் அதிமுக கூட்டணியில் சேருவதில்லை என்ற முடிவை டாக்டர் ராமதாஸ் எடுத்தார் என்று கூறப்படுவதுண்டு.
தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரகு என்பவர் விழுப்புரம் மாவட்டம் நல்லையூர் கிராமத்தில் மர்மமான முறையில் இறந்து போய் விட்டார். மற்றவர்கள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் சீனு கவுண்டரை சிபிஐ அதிகாரிகள் இன்று திண்டிவனத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். கருணாநிதியும் கைதாகியுள்ளார்.
ராமதாஸின் சகோதரரான சீனு கவுண்டர் சமீபத்தில்தான் தனது மகனுடன் பாமகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.