திமுக எம்.பி. ரித்தீஷ் மீதான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை
மதுரை: திமுக எம்.பி. ரித்தீ்ஷ் மீதான தேர்தல் விதிமீறல் வழக்கு விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலின் போது திருவாடனை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் சுப.தங்கவேலன் போட்டியிட்டார். அப்போது தேர்தல் விதிமுறையை மீறியதாக திமுக எம்.பி. ரித்தீஷ் மீது திருவாடனை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதே போல கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அரியங்கோட்டையில் கோயில் கட்ட மணல் அனுப்பியதாக அவர் மீது ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்யக் கோரி ரித்தீஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி. சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் வாதாடும்போது,
திமுக எம்.பி. ரித்தீஷ் குமார் தேர்தல் விதிமுறையை மீறியதாக சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள்தான் புகார் அளித்துள்ளனர். அவ்வாறு புகார் அளிக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. தேர்தல் அதிகாரிகள் யாரும் புகார் அளிக்கவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு இடைக் காலத் தடை விதிக்க வேண்டும் என்றார்.
இதனை ஏற்று இந்த வழக்கு விசாரணைக்கு இடைக் காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.