42 நாகை மீனவர்களை கடத்திச் சென்றது இலங்கை கடற்படை
நாகப்பட்டனம்: நாகப்பட்டனத்தைச் சேர்ந்த 42 மீனவர்களை இலங்கைக் கடற்படை காடையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இதனால் நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கைப் போய் விட்டுத் திரும்பிய பிறகு இலங்கை கடற்படையினர் பெரும் அட்டகாசத்தில் இறங்கியுள்ளனர். படு தைரியமாக தமிழக மீனவர்களை தாக்குவதும், கடத்துவதுமாக உள்ளனர்.
எல்லாம் பேசியாகி விட்டது, இனி பிரச்சினை இருக்காது என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில், இலங்கைப் படையினர் செய்து வரும் செயல்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீச்சான்குப்பத்தை சேர்ந்த 42 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க 6 படகில் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கடத்திச்சென்றனர்.
கட்த்திச்செல்லப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் திரிகோணமலையில் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், நாகை மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.