எங்கே திவாகரன்..?-இளவரசி அண்ணனைப் பிடித்து போலீஸ் விசாரணை!
நடராஜன், சசிகலா மற்றும் இளவரசியின் உறவினர்களை வளைத்து வளைத்து கூட்டிச் சென்று விசாரணை நடந்து வருகிறது.
கடந்த 21ம் தேதி முதல் திவாகரன் தலைமறைவாகியுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தப்பி விட்டார். அவரது வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. திவாகரன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்துள்ளது. இதையடுத்து திவாகரனைப் பிடித்து விட போலீஸார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
திவாகரனுக்கு நெருக்கமானவர்களான கார் டிரைவர் சித்தார்த்தன், நண்பர் சிவானந்தம்,குரு, நடராஜன், அசோகன் உட்பட பலரை விசாரணைக்காக அழைத்து சென்று திருவாரூர் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் வீடு, சசிகலா கணவர் நடராஜனின் அண்ணன் சாமிநாதன் வீடு ஆகிய இடங்களில் திவாகர் இருக்கிறாரா என்று ரெய்டு நடத்தி தேடிப் பார்த்தனர். ஆனால் திவாகரன் சிக்கவில்லை.
இதையடுத்து சசிகலாவின் அண்ணி இளவரசியின் அண்ணன் அண்ணாதுரையை நாகப்பட்டினம் ஏடிஎஸ்பி மணிவண்ணன் தலைமயிலான சிறப்பு காவல் குழு , கோட்டூரில் இருந்து விசாரணைக்காக அழைத்துச்சென்றுள்ளது.
இந்த அண்ணாதுரை, மன்னார்குடி வட்டம் கோட்டூர் ஒன்றியத்தின் அதிமுக செயலாளராகவும், சேர்மனாகவும் பதவி வகித்து வந்தார். கடந்த மாதம் இவரிடமிருந்து ஒன்றிய செயலாளர் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா.
இதையடுத்து ஒன்றிய சேர்மந் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு, கட்சியை விட்டும் ஒதுங்கிக் கொண்டு, சிவனே என்று இருந்து வருகிறார் அண்ணாதுரை. இந்த நிலையில்தான் அவரையும் பிடித்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.
இனி அடுத்து யாரைப் பிடிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பில் சசிகலா, நடராஜன், இளவரசி உறவினர்கள் பதைபதைப்புடன் உள்ளனராம்.