சென்னையி்ல் சுயஉதவிக் குழு துணை தலைவி கழுத்து அறுத்து கொலை
சென்னை: சென்னையில் சுயஉதவிக் குழு துணை தலைவி அம்பிகாவை கழுத்தை அறுத்து கொலை செய்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள ஆகாஷ் நகரைச் சேர்ந்தவர் அம்பிகா. சுய உதவிக்குழு துணை தலைவி. அவரது கணவர் ரவி. பாரிமுனையில் உள்ள சரவணபவன் ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி வருகின்றார். அவர்களுக்கு பாக்யன், அரவிந்த் என்று 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற ரவி நள்ளிரவு 1 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் அம்பிகாவை காணவில்லை. பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. வீ்ட்டையொட்டிய பகுதியில் தேடிய போது, அம்பிகா கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த இணை கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் மகேஷ்குமார் ஆகியோரின் மேற்பார்வையில் உதவி கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர் ஆதிமூலம் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று முழுவதும் ரவியிடம் விசாரித்தனர்.
மேலும் கொலையாளிகளை நேரில் பார்த்ததாக கூறப்படும் அமபிகாவின் மூத்த மகன் பாக்யன் மற்றும் இளைய மகன் அரவிந்த் ஆகிய 2 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அம்பிகாவின் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் போலீஸ் உடையி்ல் இருந்ததாகவும், அம்பிகாவை தாக்கி வீட்டில் இருந்து தூக்கிச் சென்று கொலை செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் கொலையாளிகள் நெல்லை தமிழில் பேசியதாகவும் தெரிய வந்துள்ளது.
ஜான்சிராணி சுயஉதவிக் குழுவில் துணை தலைவியாக இருந்த அம்பிகா அப்பகுதியினருக்கு நன்கு அறிமுகமானவர். மேலும் அப்பகுதியில் பலருக்கும் சுயஉதவிக் குழுவின் மூலம் கடன் வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார்.
இதில் கடனை திரும்ப செலுத்தாதவர்கள் யாராவது அவரை ஆள் வைத்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.