ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது-திகார் சிறையில் ஓராண்டை நிறைவு செய்த முன்னாள் அமைச்சர் ராசா
மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா பதவி வகித்த போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்தை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்போது பகிரங்க ஏலம் விடாமல் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையை பின்பற்றினார். இதன் மூலம் நாட்டுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திவிட்டார் என்று மத்திய கணக்கு தணிக்கைக் குழு ராசா மீது குற்றம்சாட்டியிருந்தது.
இது தொடர்பான சி.பி.ஐ. விசாரணையில், ராசா ஆதாரயம் பெறுவதற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டதும் அம்பலமானது.
ராசா பதவி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் திமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டிவிக்கு பல நூறு கோடி லஞ்சமாக கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஓராண்டுக்கு முன்னர் ஆ. ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே வழக்கில் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழியும் இதே திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கனிமொழியும் ராசாவும் கூட்டு சேர்ந்து சதி செய்தனர் என்பது புகார்.
கனிமொழி இப்போது பிணையில் விடுதலையாகிவிட்டார். மற்றவர்களும் கூட வெளியே வந்து விட்டனர். இருப்பினும் ராசா மட்டுமே தன்னந்தனியாக திகாரில் இருந்து வருகிறார். அவர் இதுவரை ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவே இல்லை. அது ஏன் என்பது பெரும் மர்மமாகவே உள்ளது.
கனிமொழி சிறையில் இருந்த காலத்தில் திமுக தலைவர் கருணாநிதி திகாரில் ராசாவையும் சந்தித்துப் பேசி வந்தார். இப்போது ராசாவின் மனைவி மட்டுமே அவரை சந்திக்கிறார். விசாரணைக்காக நீதிமன்றம் வரும்போது ராசாவை திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்திப்பது வழக்கம். மற்றபடி திமுக தலைவர்கள் யாரும் எட்டிக் கூட பார்ப்பதில்லை.
ராசாவின் கூட்டாளிகள் பலரும் பிணையில் வந்துவிட்ட போது இவர் மட்டும் இன்னமும் தாம் குற்றம்செய்யவில்லை என்று கூறி திகாரிலேயே இருந்துவருகிறார். நாட்டை உலுக்கிய ஊழல் வழக்கில் வெற்றிகரமாக 2-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள ராசா எப்போது வெளியே வருவார் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.