நெல்லையில் 8 மணிநேர மின்தடை: மின்வாரிய அலுவலகம் முற்றுகை
நெல்லையில் அதிகாரப்பூர்வமாக 2 மணிநேரம் மின்வெட்டை மின்சார வாரியம் அறிவித்தது. ஆனால் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கடந்த 2 நாட்களாக சுமார் 8 மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரவு நேரங்களிலும் மின்வெட்டு ஏற்படுவதால் பள்ளி மாணவ, மாணவிகளால் படிக்க முடியவில்லை என பெற்றோர்கள் தரப்பிலும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு கே.டி.சி. நகர் மக்கள் அங்குள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் அங்குள்ள அலுவலரிடம் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கான காரணத்தை தெரிவிக்கும்படி கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாளை இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே கே.டி.சி. நகர் அனைத்து பகுதிக்கும் ஒரே மாதிரியான மின்வெட்டு அமல்படுத்தப்படும் என மின்வாரிய உயர் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து ராகுல் காந்தி ரத்ததான கழக தலைவர் பிரம்மா கூறுகையில், கே.டி.சி. நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக மின்தடை ஏற்பட்டது. எப்போது, எத்தனை மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என்பதை முன்கூட்டியே எங்களுக்கு தெரிவியுங்கள். அதற்கு தகுந்தாற்போல் நாங்கள் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்வோம். கே.டி.சி. நகர் பகுதியில் ஒரே மாதிரியான மின்வெட்டு அமல்படுத்தப்படவில்லை என்பதை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இனிமேல் இந்த பகுதி முழுவதும் ஒரே மாதிரியான மின்வெட்டு அமல்படுத்தப்படும் என அதிகாரி எங்களிடம் உறுதியளித்துள்ளார். இனியும் இதுபோல் நடந்தால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு துவங்கியுள்ளது. இத்தேர்வுகள் வரும் 21ம் தேதி வரை நடக்கிறது. இதற்கிடையில் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் 4 மணி நேரமும், கிராமப்புற பகுதிகளில் 8 மணி நேரமும் மின் தடை ஏற்படுகிறது. இதனை தவிர அவ்வப்போதும் மின் தடை செய்யப்படுகிறது. இந்த தொடர் மின் தடையின் காரணமாக மாவட்டத்தில் செய்முறைத் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டுகளில் மின்வாரியத் துறையிடம் வேண்டுகோள் விடுத்ததன்பேரில் செய்முறைத் தேர்வு, பொது தேர்வுகளின் போது மின்தடை குறைபாடு சரி செய்யப்பட்டது. ஆனால் தற்போது இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.