அறிவிக்கப்படாத மின்வெட்டு- பிளஸ் 2 மாணவர்களின் செய்முறைத் தேர்வு பாதிப்பு
கடந்த 8-ந் தேதி முதல் பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கின. பிப்ரவரி 21-ந் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் இயற்பியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் செய்முறைத் தேர்வுகளை மின்சாரம் இன்றி எப்படி நடத்துவது என அதிகாரிகளும் ஆசிரியர்களும் கை பிசைந்த நிலையில் தவித்து வருகின்றனர்.
பெரும்பாலான அரசு பள்ளிகளில் யூபிஎஸ்ஸூம் இல்லாததால் எப்படி தேர்வுகளை நடத்துவது என குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
இதனால் மின்வெட்டு நேரத்தை தேர்வு நேரத்துக்கு தகுந்தாற்போல் மாற்றி அமைக்குமாறு அந்தந்த பகுதி மின்வாரிய அலுவலகங்களில் பள்ளி நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
தேர்வுக்குத் தயாராவதற்குமே மின்சாரம் இல்லாதது பெரும் துயரமாக இருக்கிறது என்பது மாணவர்களின் கருத்து. நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியுமா? முடியாதா? என்ற குழப்பத்தில் இருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
பெரும்பாலான பள்ளி மாணவர்களின் வீடுகளில் கம்ப்யூட்டர்கள் இல்லாத நிலையில் கம்ப்யூட்டர் அறிவியல் போன்ற செய்முறைத் தேர்வுகளுக்கு பள்ளிக் கூடங்களையே நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. மின்வெட்டு அமலில் இருப்பதால் கம்ப்யூட்டர் அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு எப்படி தயாராவது என்று தங்களுக்குத் தெரியவில்லை என்கின்றனர் மாணவர்கள்.
"மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல.. மற்ற வகுப்பு மாணவர்களும் கம்ப்யூட்டர் மற்றும் மல்டிமீடியா போன்ற வகுப்புகளை கற்பதில் பிரச்சனை உள்ளது. பள்ளிக் கூடங்கள் இயங்கும் நேரங்களில் 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருப்பதால் அவர்களால் பாடம் படிக்க இயலவில்லை என்கிறார் பாப்பநாயக்கன்பாளையத்தில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ.பள்ளி முதல்வர் எஸ். அய்யாசாமி.
8 முதல் 11 மணி நேரத்துக்கும் மேலாக நீடிக்கும் மின்வெட்டால் தங்களது குழந்தைகளை சரியான நேரத்தில் பள்ளிகளுக்கு அனுப்ப இயலவில்லை என்பது பெற்றோர்களின் கருத்தாக உள்ளது.
தங்கள் இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் இப்படியொரு மோசமான மின்வெட்டைச் சந்தித்ததில்லை என பல பள்ளிகள், குறிப்பாக அரசுப் பள்ளிகள் குற்றம்சாட்டியுள்ளன.
'அட பாழாப் போன கரண்டு மக்களுக்குதான் இல்லன்னு ஆகிப்போச்சு... இந்த பசங்களோட பரீட்சைக்காவது எந்த நேரத்தில் இருக்கும்னு சொல்லித் தொலைங்கய்யா... அந்த நேரத்தில் பிராக்டிகலை வைத்துக் கொள்கிறோம்,' என்று கடுப்புடன் கூறும் நிலைக்கு பள்ளிகள் தள்ளப்பட்டுள்ளன!