கடும் மின்வெட்டைக் கண்டித்து சிவகாசியில் 2000 தொழில் நிறுவனங்கள் ஸ்டிரைக்
சிவகாசி: தமிழக அரசின் பல மணி நேர மின்வெட்டைக் கண்டித்து சிவகாசியில் 2000க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சென்று மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
8 மணி நேர மின்வெட்டு என்ற தமிழக அரசின் அறிவிப்பால் தமிழக மக்கள் குறிப்பாக சென்னையைத் தவிர்த்த தமிழக மக்கள் மிகப் பெரும் அதிர்ச்சியிலும், கோபத்திலும் மூழ்கியுள்ளனர். எங்குமே கரண்ட்டைக் காண முடியவில்லை. எங்கு போனாலும் இருட்டாக உள்ளது. இப்படி ஒரு அவல நிலை தமிழகத்தில் இதுவரை ஏற்பட்டதில்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மிகக் கேவலமாக உள்ளது.
தொழில்துறையினர் நிலைமைதான் மிகக் கொடுமையாக மாறியுள்ளது. எந்தத் தொழிலையும் மேற்கொள்ள முடியாமல் தொழில்துறையினர் முற்றிலும் முடங்கிப் போயுள்ளனர். ஒட்டுமொத்த மாநில வளர்ச்சியும் ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கிறது.
தொழிற்சாலைகள் இயங்காததால் அதில் பணியாற்றும் பல லட்சம் தொழிலாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். மாணவர்கள் படிக்க முடியாமல் திணறுகின்றனர். வீடுகளில் மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் போன்றவற்றை இயக்க முடியாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.
தொழில் நகரங்கள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளன. தென்னிந்திய மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில், மின் தடையால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. சுமார் 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.
திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. விசைத்தறி மற்றும் நூற்பாலைகள் இயங்கவில்லை. மின்வெட்டை கண்டித்து மக்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர்.
இந்த நிலையில் குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியிலும் தொழில்துறை கடும் அடியை சந்தித்து வருகிறது. இங்கு, ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அச்சகங்கள், பாலி பிரின்டிங், கட்டிங், ஸ்கோரிங் தொழில்கள் மின்தடையால் தற்போது ஸ்தம்பித்து விட்டன. இங்கு 20 ஆயிரம் தொழிலாளர்கள், வேலையிழந்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
பகலில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என்று பல நிறுவனங்கள் தங்கள் வேலை நேரத்தை இரவுக்கு மாற்றின. ஆனால் தற்போது இரவிலும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தத் தொடர் மின்வெட்டை கண்டித்து சிவகாசி சிறு, குறு தொழில் கூட்டமைப்பினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பாலிதீன் பை தயாரிக்கும் நிறுவனங்கள், அச்சகங்கள் என 2000க்கும் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், நிறுவன உரிமையாளர்கள் நேற்று காலை 10 மணிக்கு சிவகாசி - திருத்தங்கல் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது மின்வாரியத்தை கண்டித்து கடுமையான கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.