பாங்காக்கில் அடுத்தடுத்து 3 குண்டு வெடிப்புகள்-காயமடைந்த ஈரானியர் மீது சந்தேகம்

புதன்கிழமை, பிப்ரவரி 15, 2012, 8:48 [IST]
பாங்காக்: தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்த 3 குண்டுவெடிப்புகளால் அந்த நாடே அதிர்ந்துள்ளது. இதில் ஒரு ஈரானியர் படுகாயமடைந்துள்ளார். அவர்தான் குண்டுவெடிப்புக்குக் காரணமாக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்தான் வெடிகுண்டைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

வெடிகுண்டு சம்பவத்தில் அவரது இரு கால்களும் துண்டிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.

இதுகுறித்து பாங்காக் காவல்துறை தலைவர் விச்சாய் சுங்கரபாய் கூறுகையில், மூன்று குண்டுகள் வெடித்துள்ளன. இருப்பினும் உயிரிழப்பு ஏதுமில்லை. அதேசமயம், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றார்.

குண்டுவெடிப்பு நடந்த ஒரு இடத்தில் சாலையோரமாக ஒருவர் படுகாயமடைந்த நிலையில் காணப்படும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர்தான் அந்த ஈரானியர் என்று கூறப்படுகிறது. அவரது கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்டு விட்டன. இவர்தான் வெடிகுண்டை கொண்டு வந்ததாக தாய்லாந்து ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இருப்பினும் இதுகுறித்து தாய்லாந்து அதிகாரிகள் எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

சம்பந்தப்பட்ட நபரின் பெயர் சயீத் முராபி என்றும் கூறப்படுகிறது. அவரிடம் போலீஸார் இன்னும் விசாரணை நடத்தவில்லை என்று தெரிகிறது. தற்போது அவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நபர் ஒரு கருப்புப் பையில் வெடிகுண்டை எடுத்து வந்ததாகவும், தனது வீட்டுக்கு ஒரு டாக்சியில் வந்ததாகவும், டாக்சியிலிருந்து இறங்கியபோது அவருக்கும் டாக்சி டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும், இதையடுத்து ஒரு குண்டை எடுத்து டாக்சி மீது வீசியதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. தகவல் அறிந்து போலீஸார் வந்தபோது இன்னொரு குண்டை எடுத்து வீசியதாகவும் அதில்தான் அவரது கால்கள் துண்டிக்கப்பட்டன என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த நபர் வசித்த வீட்டில் முதல் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அந்த வீட்டில் இந்த நபர் தவிர இன்னொருவரும் வசித்து வந்தார். அவரைத் தேடும் பணி தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த வீட்டிலிருந்து மேலும் நான்கு குண்டுகளை போலீஸார் கண்டுபிடித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தீவிரவாதத் தாக்குதலா அல்லது வேறு ஏதேனுமா என்பதை இப்போதைக்கு தெரிவிக்க இயலாது என்று தாய்லாந்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே இந்தியா மற்றும் ஜார்ஜியாவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு ஈரானியர்களே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தாய்லாந்து குண்டுவெடிப்பிலும் ஈரானியரே காரணம் என்று செய்தி வெளியாகியுள்ளதால் ஈரான் மீது உலகத்தின் பார்வை திரும்பியுள்ளது.

கடந்த மாதம் தாய்லாந்தில், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஒருவர் பிடிபட்டார். அவரிடமிருந்து 4000 கிலோ யூரியா உரமும், திரவ அம்மோனியம் நைட்ரேட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் தற்போதைய தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளது.
Posted by:
English summary
Three explosions rocked a busy neighbourhood in the Thai capital on Tuesday. A man thought to be an Iranian was seriously wounded when a bomb he was carrying exploded and blew both his legs off, reports said. "There were three explosions, but no dead," Police Major General Wichai Sungprapai was quoted by AFP as saying. Reports said five people are injured.
User Comments
paarvai 15 Feb 2012 12:31 pm
இனி உலகின் எந்த மூலையில் குண்டு வெடித்தாலும் எவன் செத்தாலும் கல் தடுக்கி கீழே விழுந்தாலும் அது ஈரானின் சதி தான் இதை எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள்
Ezhumalai PMP 15 Feb 2012 09:31 pm
நான் ஏற்கனவே பலமுறை கூறியது போல, மேற்கத்திய நாடுகளும், அரபு நாடுகளும் சேர்ந்துகொண்டு உலகம் மற்றும் உலகமக்களின் வாழ்வைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு அங்கமே இந்தச் செய்தி. மற்றபடி, இந்த பாங்காக் குண்டு வெடிப்பில் ஒன்று ஒரு ஈரானியருக்கும், வாடகை வாகன ஒட்டிக்கும் நடந்த சண்டையின் காரணமாக நிகழ்ந்துள்ளது. கடைசியில் குண்டு வைக்க வந்த ஈரானியர், தனது இரண்டு கால்களையும் இழந்து விட்டாராம்.
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST