திமுக வேட்பாளரை ஆதரித்து மார்ச் 15ம் தேதி சங்கரன்கோவிலில் கருணாநிதி பிரசாரம்
சென்னை: சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்து பேசவுள்ளார்.
மார்ச் 18ம் தேதி சங்கரன்கோவிலில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் முத்துச்செல்வி, திமுக சார்பில் ஜவஹர் சூரியக்குமார், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், தேமுதிக சார்பில் முத்துக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
நான்கு முனை போட்டியைச் சந்தித்துள்ள சங்கரன்கோவிலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் 27ம் தேதி வேட்பு மனுவைத் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 27-ம் தேதி வேட்பு மனுதாக்கல் நடைபெறுகிறது. மார்ச் 5 மற்றும் 6-ம் தேதிகளில் திமுக வேட்பாளரை ஆதரித்து பொதுச்செயலாளர் அன்பழகன் பிரசாரம் மேற்கொள்வார்.
மு.க.ஸ்டாலின் 12,13 மற்றும் 14-ம் தேதிகளிலும், தலைவர் கருணாநிதி 15-ம் தேதியும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிகள் கட்சியின் தென்மண்டல அமைப்புச் செயலர் மு.க.அழகிரி தலைமையில் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.