விஜயகாந்த்துக்காக விருத்தாச்சலத்தில் பணத்தை இறைத்தவருக்கே அனுமதி இல்லை!

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2012, 8:40 [IST]
சென்னை: தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் மகா கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்பட்டன. தேமுதிகவின் தொண்டர் அணியினர் அடையாள அட்டை இல்லாமல் வந்த யாரையும் உள்ளே விடவில்லை. அப்படி அனுமதி மறுக்கப்பட்டவர்களில் ஒருவர் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகி ஒருவர். இவர் விஜயகாந்த்துக்காக ரூ. 1 லட்சத்துக்கும் மேல் செலவு செய்து வெற்றிக்கு பாடுபட்டவராம்.

தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நேற்று வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குள் 'அந்நியர்கள் மற்றும் உளவாளிகள்' புகுந்து விடக் கூடாது என்பதற்காகவும், தகவல்கள் வெளியில் கசிந்து விடக் கூடாது என்பதற்காகவும் ஏகப்பட்ட கெடுபிடிகளைக் கடைப்பிடித்தார்கள்.

கிட்டத்தட்ட ராணுவ சோதனை போல கூட்டத்திற்கு வந்தவர்களிடம் சோதனை நடந்தது. செல்போன்கள், கேமராக்கள் இருக்கிறதா என்று தடவித் தடவி சோதனையிட்டனர். பெண்களை சோதனையிட பெண் தொண்டர்களை வைத்திருந்தனர்.

மேலும் அடையாள அட்டை இல்லாமல் யாரையும் உள்ளே விடவில்லை. வெளியூரைச் சேர்ந்த ஒரு பெண் நிர்வாகி தனக்குத் துணையாக பெண் ஒருவரைக் கூட்டி வந்திருந்தார். அந்தப் பெண்ணை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால்கோபமடைந்த அப்பெண், செல்போன் கூடாது, கேமரா கூடாது என்றீர்கள். ஆனால் துணைக்கு வந்த பெண்ணையும் விட மறுத்தால் எப்படி. இவருக்கு யாரையும் இங்கு தெரியாது. இங்கு தனியாக விட்டுச் சென்றால் ஏதாவது நேரிட்டால் யார் பொறுப்பு. நீங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியளியுங்கள் விட்டுச் செல்கிறேன் என்று ஒரே போடாக போட்டார். இதனால் குழம்பிப் போன தொண்டர் படையினர், உடனடியாக புது அடையாள அட்டையை கையில் திணித்து போய் வாருங்கள் என்று உள்ளே அனுப்பி வைத்தனர்.

இதை விட ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், விஜயகாந்த் மட்டும் விருத்தாச்சலத்தில் வெற்றி பெற்றபோது அவருக்காக பணத்தை வாரியிறைத்த நிர்வாகியின் நிலைமைதான். அந்த நிர்வாகியை உள்ளே விடவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். கேப்டனுக்காக ரூ. 1 லட்சத்துக்கும் மேல் செலவிட்டேன். கேப்டன் மட்டுமே அப்போது வெற்றி பெற்றாலும் கூட எனது தொகுதியில் வெற்றி பெற்றதை நினைத்து பெரும் மகிழ்ச்சியுடன் இருந்தேன். ஆனால் என்னையே உள்ளே விட மறுத்து விட்டார்கள் என்று அழாத குறையாக புலம்பியபடி இருந்தார். கடைசி வரை அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. அவரும் போகாமல் புலம்பியபடியே இருந்தார்.
Posted by:
English summary
Heavy security forced the party cadres to find it to difficult to enter into the DMDK's general council meeting venue. Many functionaries, who came without ID cards, invitations were not allowed to attend the meeting.
User Comments
Ganesan Venkataraman 22 Feb 2012 10:01 pm
இந்த செய்தி தாள் ஏன் பக்கங்களை இந்த காட்டுபூனை பற்றி புரளி செய்திகளைப் போட்டு வீணாக்குது?
Nadodi Mannan 22 Feb 2012 10:42 am
பிரேமலதா அடையாள அட்டையை காட்டினாரா?
Ganesan Venkataraman 22 Feb 2012 10:03 pm
கேப்டன் கிட்ட தனியா காட்டியதா சொல்றாங்க. ஆனா அவரு எங்கோ பராக்கு பார்த்துகிட்டு மப்பில இருந்தாராம்.
[ கருத்தை எழுதுங்கள் ]
   
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST