டெல்லி: லண்டன் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் தகுதிச்சுற்று போட்டிகளில் நேற்று இந்திய ஆண்கள் அணி, கனடாவை வீழ்த்தியது. ஆனால் இந்திய பெண்கள் அணி, தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது.இந்த ஆண்டு(2012) லண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள ஹாக்கி அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிசுற்று போட்டிகள் டெல்லியில் உள்ள மேயர் தியன்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.ஆண்கள் பிரிவு:ஆண்கள் பிரிவில் நேற்று இந்தியா, கனடா அணிகள் மோதின. விறுவிறுப்பான போட்டியில் இந்தியாவின் சிவேந்திர சிங் 26 நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, இந்திய கோல் கணக்கை துவக்கி வைத்தார். அதன்பிறகு 40வது நிமிடத்தில் வந்த பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் இந்திய வீரர் சந்தீப் சிங், 2வது கோலை அடித்தார்.இந்த நிலையில் சுதாரித்து கொண்ட கனடா அணியின் மார்க் பியர்சன் 50வது நிமிடத்தில் ஒரு கோலையும், ஸ்காட் டப்பர் 53 நிமிடத்தில் 2வது கோலையும் அடித்தனர். இதனால் இரு அணிகளும் சமநிலையில் நீடித்து, ஆட்டம் விறுவிறுப்படைந்தது.இருப்பினும் போட்டியின் 61வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி கொண்ட சந்தீப் சிங் 3வது கோலை அடித்தார். இதன்மூலம் இந்தியா, 3-2 என்ற திரில் வெற்றியை பெற்றது.பெண்கள் அணி:பெண்கள் பிரிவில் நேற்று இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. போட்டியின் 12வது நிமிடத்திலேயே தென் ஆப்பிரிக்காவின் டிர்கி சாம்பர்லின் 1 கோலை அடித்தார். பதிலுக்கு இந்தியாவை சேர்ந்த அசுந்தா லக்ரா 23 நிமிடத்தில் 1 கோலை அடித்தார். அதன்பிறகு 32வது நிமிடத்தில் டிர்கி சர்பர்லின் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.அதற்கு ஈடுகொடுத்த இந்தியா 52 நிமிடத்தில் செளந்தர்யா எண்டேலா 1 கோல் அடித்தார். அதன்பிறகு 53 நிமிடத்தில் சுலேடி டேமன்ஸ்சும், 58 நிமிடத்தில் டிர்கி சாம்பர்லினும் தலா ஒரு கோல் அடித்தனர். பதிலுக்கு இந்தியா கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.இந்த நிலையில் 67வது நிமிடத்தில் சுலேடி டேமன்ஸ் மீண்டும் ஒரு கோல் அடிக்க, தென் ஆப்பிரிக்கா 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.