பெங்களூர் ஆசிரமத்தில் சித்ரவதைக்கு ஆளான 41 குழந்தைகள் மீட்பு
பெங்களூர்: பெங்களூரில் உரிய உரிமம் இன்றி நடத்தப்பட்ட ஆசிரமத்தில் இருந்து 22 பெண் குழந்தைகள் உள்பட 41 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூர் சல்கட்டாவில் உள்ளது சர்ச் ஆப் கிரைஸ்ட் என்னும் ஆசிரமம். அங்கு 22 பெண் குழந்தைகள் உள்பட 41 குழந்தைகள் இருந்தனர். அந்த ஆசிரமத்தை அமெரிக்கர் வில்லியம் என்பவரும் அவரது மகன் ஜான் சார்லஸும் நடத்தி வந்தனர். அவர்கள் அமெரிக்காவில் இருந்து நன்கொடை பெற்று ஆசிரமத்தை நடத்தி வந்தனர்.
அவர்கள் அங்குள்ள குழந்தைகளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். இதில் சார்லஸ் பெண் குழந்தைகளிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்துள்ளார். கொடுமை தாங்க முடியாத ஒரு குழந்தை இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தது. இதையடுத்து நேற்று நள்ளரவில் அந்த ஆசிரமத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தி 41 குழந்தைகளையும் மீட்டனர்.
குழந்தைகள் ஆசிரமத்தில் சேர்ந்ததற்கான ஆவணங்கள் எதுவுமே அங்கு இல்லை. மீட்கப்பட்ட குழந்தைகளில் பலரது உடலில் காயம் இருந்தது. குழந்தைகளை அடிக்க பயன்படுத்தப்பட்ட பிரம்பை போலீசார் கைப்பற்றினர். மேலும் ஆசிரமத்திற்கு சீல் வைத்தனர்.
வில்லியமும், சார்லஸும் பல நிறுவனங்கள், நபர்கள் என்று பலரிடம் நன்கொடை பெற்றுள்ளனர் என்றும், அதை தங்களுக்காக செலவு செய்ததில்லை என்றும் குழந்தைகள் தெரிவித்தனர்.