
பாட்னா: பெண்களுக்கான உலககோப்பை கபடிப் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா அணி, ஈரானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
பீகார் மாநிலத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி பாட்னாவில் பெண்களுக்கான முதல் உலககோப்பை கபடிப் போட்டி நடைபெற்றது. இதில் அமெரிக்கா, ஈரான், இந்தியா, மெக்சிகோ உட்பட 16 அணிகள் கலந்து கொண்டன. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின.
இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டான கபடிப் போட்டியில், ஈரான் வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர். ஆனால் திறமையான ரைடு மூலம் போட்டியின் முதல் பாதி, 19 -11 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா வசமானது.
இதே முன்னிலையை இந்தியா போட்டியின் 2வது பாதியிலும் தொடர்ந்தது. போட்டியின் இறுதியில் இந்தியா 25-19 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை தோற்கடித்தது. இதன்மூலம் முதல் உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது.
பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, சாம்பியன் கோப்பையையும் தங்கப் பதக்கங்களையும் இந்திய அணிக்கு வழங்கினார். 2ம் இடத்தை பெற்ற ஈரான் அணிக்கு, இந்தி நடிகரும் எம்பியுமான சத்ருகன் சின்கா எம்பி கோப்பையை வழங்கினார்.










