
சென்னை: பிரபல டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், கிங்பிஷர் விமான நிறுவன நிர்வாக குழு இயக்குனர் பதவியில் இருந்து நேற்று திடீரென விலகினார்.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிங்பிஷர் விமான நிறுவனம், தற்போது பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
இந்த நிறுவனத்தின் தலைவராக விஜய் மல்லையா, துணை தலைவராக சுபாஷ் குப்தே, மற்றொரு தலைவர் மற்றும் தலைமை நிதித்துறை அதிகாரியாக ஏ.கே.ரவி நெடுங்காடி, விஜய் அமிர்தராஜ் மற்றும் ஐ.சி.ஏ.ஐ., உறுப்பினர் அனில்குமார் கங்குலி ஆகியோர் நிர்வாக குழுவின் இயக்குனர்களாக பதவி வகித்து வந்தனர். இந்நிலையில், விஜய்அமிர்தராஜ் நேற்று திடீரென பதவி விலகினார்.
நிறுவனத்தின் போர்டு மீட்டிங் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் விஜய் அமிர்தராஜால் பங்கேற்க முடியவில்லை. எனவேதான் அவர் விலகிவிட்டார். அவரது விலகல் ஏற்கப்பட்டது என கிங்பிஷர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கிங்பிஷர் நிர்வாகத்தில் நான்கு சுயேச்சை இயக்குநர்கள் இருந்தனர். அவர்களில் விஜய் அமிர்தராஜும் ஒருவர். இப்போது மூன்று இயக்குநர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















