அமெரிக்காவின் தீர்மானத்தை முறியடித்து தப்பிக்க இலங்கை அரசு கடும் போராட்டம்
கொழும்பு: ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தனக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை முறியடித்து தப்பிப்பதற்காக பல்வேறு வழிகளை கையாண்டு வரும் இலங்கை அரசு, தாங்கள் யோக்கியர்கள்தான் என்பதை நிரூபிப்பதற்காக, கற்றுக் கொண்ட பாடம் மற்றும் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் (எல்.எல்.ஆர்.சி.,) பரிந்துரைகளை தாங்கள் தீவிரமாக அமல்படுத்தவுள்ளதாக கூறி ஒரு திட்டத்தை சமர்ப்பிக்க முனைந்துள்ளதாம்.
இந்தத் திட்டத்தை சமர்ப்பித்து அதன் மூலம் அமெரிக்காவுக்கு ஆதரவாக திரண்டுள்ள நாடுகளிடையே பிளவு ஏற்படுத்தி அதில் குளிர்காய்ந்து தப்பி விடலாம் என்று இலங்கை அரசு எண்ணுகிறாம்.
அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் வருகிற 19ம் தேதி வாக்கெடுப்புக்கு வருகிறது. இந்த நிலையில் லண்டனின் சேனல் 4 நிறுவனம் புதிய போர்க்குற்ற வீடியோவை வெளியிட்டு விட்டது. இதனால் இலங்கைக்கு பெரும் நெருக்கடி முற்றியுள்ளது.
தற்போதைய நிலையில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகள் வரை இருப்பதாக கூறப்படுகிறது. 24 பேரின் ஆதரவு இருந்தால் தீர்மானம் நிறைவேறி விடும். இந்த எண்ணிக்கையை அமெரிக்கா பெற்று விடும் என்றும் நம்பப்படுகிறது. புதிய போர்க்குற்ற வீடியோ அதற்குத் துணை புரியும் என்று மனித உரிமை அமைப்புகள் நம்பிக்கையுடன் உள்ளன.
இந்த நிலையில் இதை முறியடிக்க எல்எல்ஆர்சி பரிந்துரைகளை தாங்கள் தீவிரமாக அமல்படுத்தப்போவதாக கூறி ஒரு திட்டத்தை சமர்ப்பித்து தீர்மானத்தை முறியடிக்க இலங்கை முயற்சித்து வருகிறதாம்.
இதுதொடர்பான திட்டத்தையும் அது வேகமாக தயாரித்து வருகிறதாம். ஆனால் அமெரிக்கா இதை நிராகரித்துள்ளது. மேலும், தொடர்ந்து இலங்கை இழுத்தடிப்பு நடவடிக்கையில்தான் மும்முரமாக இருக்கிறதே தவிர உண்மையான தீர்வுக்கு அது வழி காணுவது போலத் தெரியவில்லை என்று அது கூறியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கூறுகையில், இலங்கை இப்படியே இருந்து வந்தால் மீண்டும் அங்கு ஒரு போர் வெடிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை என்று எச்சரிததார்.