எம்.பிக்களை இழிவாக விமர்சித்த புகார்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உரிமை மீறல் நோட்டீஸ்
டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களை பாலியல் வன்முறையாளர்கள், கொள்ளையர்கள், கொலைகாரர்கள் என்று பேசிய சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாடாளுமன்ற செயலாளர் மூலம் உரிமை மீறல் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேசம் காஷியாபாத்தில் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், நாடாளுமன்றத்தில் தற்போது வெறுக்கத்தக்க வகையில் 163 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்கள் கற்பழிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். அவர்கள் ஜன்லோக்பால் சட்டத்தை பாராளுமன்றத்தில் எப்படி நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்க முடியும். வறுமை, லஞ்ச ஊழலை எப்படி ஒழிப்பார்கள்? என்றார்.
இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்.பி. சஜ்ஜன்சிங் வெர்மா, நாடாளுமன்ற செயலாளர் மூலமாக தற்போது உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 7 மாதத்தில் கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்பட்ட 2-வது உரிமை மீறல் நோட்டீசு இதுவாகும்.
கடந்த ஆகஸ்டு மாதம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தின் போது இதேபோல் எம்.பி.க்களை தரக்குறைவாக பேசியதற்காக அவருக்கு உரிமை மீறல் நோட்டீசு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.