ராஜபக்சே மகனுக்கு இந்தியாவில் விருது!
சிங்கள இனவெறியின் அடையாளமாகத் திகழும் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் சிறப்பு விருது அளிக்கும் விழாவை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்ததோடு, அவருக்கு இஸட் பாதுகாப்பும் அளிப்பதாக அறிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஒரு பத்திரிகை விழாவில் சிறந்த சர்வதேச இளைஞன் என்ற விருதினை வழங்குகிறார்களாம்.
இந்த விழா பற்றிய விவரங்கள் வெளியானதிலிருந்து மிகுந்த மனக்கொதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் தமிழர்கள்.
போர் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென உலகம் முழுக்க தமிழர்கள் கண்ணீர் வடித்து வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில் போர் குற்றவாளியான ராஜபக்சேவின் மகனுக்கு இந்திய அரசின் ஆதரவோடு சிறந்த சர்வதேச இளைஞன் விருது வழங்குவது எத்தனை குரூரமான சிந்தனை என தமிழுணர்வாளர்கள் கொதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அடுத்த வாரம் டெல்லிக்கு வரும் நமல் ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக அவருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பை இந்திய அரசு வழங்கியிருக்கிறது.