மலேசியா வழியாக தப்பிய டெல்லி குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஈரானியர்கள்
டெல்லி: டெல்லியில் இஸ்ரேல் தூதரக காரில் காந்த ஸ்டிக்கர் குண்டு பொருத்தி தாக்கிய ஈரானியர்கள் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் வழியே ஈரானுக்கு தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
தப்பிய ஈரானியர்களில் ஒருவரான ஹெளசங் அப்சர் டெல்லியிலிருந்து முதலில் கோலாலம்பூர் தப்பிச் சென்றுள்ளார். குண்டுவெடிப்பில் தொடர்புடைய மற்ற இருவரும் மறுநாள் ஹெசங் அப்சருடன் இணைந்துள்ளனர்.
இவர்கள் மூவரும் டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலும் தொடர் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தனர் என்று மத்திய புலனாய்வுத் துறைக்கு மலேசிய அரசு தகவல்களை பரிமாறியுள்ளது.
ஆனால் பாங்காங்கில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த செய்தி ஊடகங்களில் கசிந்ததால் மூவரும் பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஈரான் தலைநகர் டெக்ரானுக்கு திரும்பிவிட்டனர்.
கோலாலம்பூரில் மலேசிய காவல்துறையால் கைது செய்யப்பட்ட மசூத் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த ஆவணங்களை வைத்தே டெல்லி தாக்குதலில் பத்திரிகையாளர் சையத் கஸ்மி அகமதுவின் தொடர்பும் தெரியவந்துள்ளது.
2009-ம் ஆண்டிலிருந்து ஈரானிய அணு ஆயுத விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்படதற்கு பதிலடியாக ஜார்ஜியா, டெல்லி, பாங்காங்க்கில் தொடர் தாக்குதல்களை ஈரானியர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
ஈரான் விஞ்ஞானிகள் காந்த ஸ்டிக்கர் குண்டுகளை மூலம் படுகொலை செய்யப்பட்டதால் பதில் தாக்குதல்களுக்கும் காந்த ஸ்டிக்கர் குண்டுகளை ஈரானியர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர்.