என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மேலும் ஒருவரின் உடல் அடையாளம் காணப்பட்டது
சென்னை: சென்னை வேளச்சேரியில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வடமநைலத்தவரில் மேலும் ஒருவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட ஒரே ஒரு உடல் அரசு பொதுமருத்துவமனையில் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 23-ந்தேதி வேளச்சேரியில் வங்கிக் கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இதில் கொள்ளை கும்பல் தலைவன் அஜய்குமார் அவனது கூட்டாளிகள் 2 பேர் உடல்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு பீகாரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சென்னை வந்து உடல்களை பெற்றுச் சென்றனர்.
இதில் அடையாளம் காணப்படாத மேலும் 2 கொள்ளையர்களின் உடல்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு கொள்ளையனின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பீகார், மாநிலம் நாளந்தா பகுதியை சேர்ந்த ஜே.பி. யாதவ் என தெரிய வந்துள்ளது. இவன் மீது பீகார், மும்பையில் பல்வேறு வங்கி கொள்ளை வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது. அண்மையில்தான் சிறையிலிருந்து இவன் விடுதலையானவன் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வழக்கு விபரங்களை எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே சென்னையில் இருந்து ஒரு தனிப்படையினர் பீகாரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அடையாளம் காணப்பட்ட யாதவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து உடலை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
இன்னும் ஒரு கொள்ளையனின் உடல் மட்டும் அடையாளம் காணப்படாமல் அரசு பொது மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.