தூத்துக்குடி அருகே மதுபானம் பதுக்கிய அதிமுக ஊராட்சி துணைத் தலைவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வீட்டில் மதுபானம் பதுக்கி வைத்திருந்த அதிமுக ஊராட்சி துணைத் தலைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் இன்று நடப்பதால் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் அடைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் யாரும் மதுபானங்கள் விற்றாலோ, பதுக்கி வைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியில் வெளிமாநில மதுபானம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு போலீசார் இன்று காலை குலையன்கரிசலை அடுத்த திருமலையாபுரம் கிராமத்தில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அந்த வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 360 பாட்டில் புதுச்சேரி மாநில மதுவகைகளை பறிமுதல் செய்தனர்.
இதற்கு காரணமான குலையன்கரிசல் அதிமுக ஊராட்சி துணைத் தலைவர் சரவணவேல்(37) மற்றும் குரு(32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சங்கரன்கோவில் தேர்தலுக்காக புதுச்சேரி மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.