மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸா? : திமுக உயர்நிலைக் குழு கூடுகிறது
சென்னை: ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது தொடர்பாக விவாதிக்க மார்ச் 20-ந் தேதி திமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
திமு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இக்கூடத்தில் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அன்பழகன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு உள்ளன. ஆனால் மத்திய அரசு மழுப்பலான போக்கையே கடைபிடித்து வருகிறது.
இந்நிலையில் ஜெனீவா தீர்மானத்தை ஆதரிக்காமல் இலங்கை அரசை காப்பாற்றும் வகையில் மத்திய அரசு செயல்படுமேயானால் அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொள்ளும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வரும் 20-ந் தேதி நடைபெறும் தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.