திமுக அறிமுகப்படுத்திய ஸ்டார் ஹெல்த் திட்டத்தில் குறைபாடு - அமைச்சர் விஜய் !
அருப்புக்கோட்டை: கடந்த திமுக ஆட்சியில் ஸ்டார் ஹெல்த் திட்டம் மூலம் தேவையற்ற ஆபரேஷன் செய்து, தனியார் மருத்துவமனையினர் லாப நோக்கத்துடன் செயல்பட்டதாக அமைச்சர் விஜய் குற்றச்சாட்டி உள்ளார்.
தமிழக சுகாதார அமைச்சர் விஜய் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவக் காப்பீடு திட்டத்தை துவக்கி வைத்தார்.
அதன் பிறகு அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மருத்துவத் துறைக்கு ரூ.4,863 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டார் ஹெல்த் தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்ட பழைய காப்பீடு திட்டத்தில், 650 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. புது மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.780 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் புதிய யுனைடெட் இந்தியா இன்ஸ்சுரனஸ் புதிய திட்டம் மூலம் 1,016 நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் 56 அரசு மருத்துவமனைகளில் காப்பீடு திட்டம் மூலம் ஆபரேஷன் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனைகளில் இத்திட்டத்திற்கு தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டு ஏசி வசதி செய்யப்படும்.
கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் தேவையற்ற ஆபரேஷன் செய்து, தனியார் மருத்துவமனையினர் லாப நோக்கத்துடன் செயல்பட்டனர்.