சங்கரன் கோவில் - தொடங்கியது வாக்குப்பதிவு - மக்கள் ஆர்வத்துடன் க்யூவில்!
சங்கரன்கோவில்: மிகுந்த எதிர்ப்பார்ப்புக்குரிய சங்கரன்கோவில் இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காலையிலேயே வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் (தனி) சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு, அமைச்சரான சொ.கருப்பசாமி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அங்கு இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எஸ்.முத்துச்செல்வி, தி.மு.க. சார்பில் ஜவகர் சூரியகுமார், ம.தி.மு.க. சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க. சார்பில் முத்துக்குமார், பாரதீய ஜனதா சார்பில் முருகன் மற்றும் 8 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
மொத்தம் 13 பேர் களத்தில் இருந்தாலும் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடையே மட்டுமே 4 முனை போட்டி நிலவுகிறது.
அனல் பறந்த பிரசாரம்
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, தமிழக அரசின் 32 அமைச்சர்கள், தி.மு.க. தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அமைச்சர் முக அழகிரி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.
இது தவிர கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் சங்கரன்கோவில் தொகுதியில் முகாமிட்டு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டு சேகரித்தனர்.
ஜெயலலிதா ஆட்சின் மீதான மக்கள் மதிப்பீடு என்று இந்த தேர்தல் பார்க்கப்படுவதால் இதில் தனது திராணியை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஜெயலலிதா அரசு.
தொடங்கியது ஓட்டுப்பதிவு
பலத்த பாதுகாப்புக்கிடையே இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை இடைவிடாது ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.
8 மணிக்குதான் வாக்குப்பதிவு என்றாலும், வாக்காளர்கள் பல சாவடிகளிலும் காலையிலேயே வந்து வரிசையில் நின்றுவிட்டனர். பிற்பகலில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் காலையிலேயே வாக்களிப்பதில் பலரும் ஆர்வம் காட்டினர்.
மேலும் கட்சிகளின் வேட்பாளர்களிடம் ஏற்கெனவே வாக்காளர்கள் 'கமிட்' ஆகிவிட்டது இன்னொரு முக்கிய காரணம்!
சங்கரன் கோவில் சில முக்கிய விவரங்கள்:
இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,05,870.
இதில் ஆண் வாக்காளர்கள் 1,02,815.
பெண் வாக்காளர்கள் 1,03,055.
இவர்கள் ஓட்டுப் போடுவதற்காக 242 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கருதப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று 24 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும்.
வாக்குப்பதிவை கண்காணிக்க மேலிட தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் நுண் தேர்தல் பார்வையாளர்கள் 25 பேர் வந்துள்ளனர்.
ஓட்டுப்பதிவு நடைபெறுவதை ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெப் கேமரா மூலம் படம் பிடிக்கிறார்கள். உயர் அதிகாரிகள் வாக்குப்பதிவு நிலவரங்களை உடனுக்குடன் நேரடியாக அறியும் வகையில் இணையதள வசதியுடன் லேப்டாப் கம்ப்யூட்டர் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ளன.
அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் வாக்குச்சாவடிகளுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மத்திய பாதுகாப்பு படை போலீசாருடன், வெளி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மொத்தம் 3 ஆயிரத்து 500 போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
ஓட்டு எண்ணிக்கை
இன்று மாலை வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், புளியங்குடி வீராச்சாமி செட்டியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன.
அங்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அன்று பகல் 12 மணிக்குள் முடிவு தெரிந்துவிடும்.
கடந்த தேர்தல் ஓட்டு விவரம்
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம்:
மொத்த வாக்குகள் -1,91,012
பதிவானவை -1,44,627
சொ.கருப்பசாமி (அ.தி.மு.க.) -72,297
எம்.உமா மகேஸ்வரி (தி.மு.க.) -61,902
சாரதா (பா.ஜனதா) -1,862
(மதிமுக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை)