ஒரே மாதத்தில் 87.70 லட்சம் ஜி.எஸ்.எம். செல்போன் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு
ஜி.எஸ்.எம்-சி.டீ.எம்.ஏ.
ஜி.எஸ்.எம். மற்றும் சி.டீ.எம்.ஏ. ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களில் செல்போன் சேவை வழங்கப்படுகிறது. ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில், ஒரே செல்போன் சாதனத்தில் பல்வேறு நிறுவனங்களின் சிம்' கார்டுகளை பயன்படுத்திப் பேச முடியும். அதாவது, ஜி.எஸ்.எம். சேவையில் சாதனம் வழங்கும் நிறுவனமும், சேவைக்கான இணைப்பு வழங்கும் நிறுவனமும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் சி.டீ.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் சிம்' கார்டை வழங்கும் நிறுவனமே செல்போன் சாதனத்தையும் வழங்கும். எனவே இந்த தொழில்நுட்பத்தில் ஒரு சாதனத்தில் வேறு எந்த சிம்' கார்டையும் பயன்படுத்த இயலாது.
பார்தி ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலார், பீ.எஸ்.என்.எல்., ஏர்செல், யூனிநார் ஆகிய நிறுவனங்கள் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் மட்டும் செல்போன் சேவை அளிக்கின்றன. இச்சந்தையில் முன்னணி ஐந்து நிறுவனங்கள் 90 சதவீத பங்குடன் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ரிலையன்ஸ் கம்ïனிகேஷன்ஸ், டாட்டா டெலிசர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் ஜி.எஸ்.எம்., சி.டீ.எம்.ஏ. ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களிலும் சேவை வழங்குகின்றன.
இந்தியாவில் சிஸ்டமா ஷியாம் டெலிசர்வீசஸ் நிறுவனம் ஒன்றுதான் சி.டீ. எம்.ஏ. தொழில்நுட்பத்தில் மட்டும் செல்போன் சேவை வழங்கி வருகிறது. பிப்ரவரியில் இந்நிறுவனம் ஈர்த்துள்ள புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2.32 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனையடுத்து இந்நிறுவன வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 1.54 கோடியை எட்டியுள்ளது.
பாரதி ஏர்டெல்
இந்தியாவில் செல்போன் சேவையில் முதலிடத்தில் இருந்து வரும் பார்தி ஏர்டெல் நிறுவனம், பிப்ரவரி மாதத்தில் 18 லட்சத்திற்கும் அதிகமான புதியவர்களை இணைத்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவன வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 17.90 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது இதன் சந்தைப் பங்களிப்பு 27 சதவீதமாக உள்ளது.
வோடபோன்
ஜி.எஸ்.எம். சேவையில் இரண்டாவது இடத்தில் உள்ள வோடாபோன் நிறுவனம் 8.38 லட்சத்திற்கும் அதிகமான அளவில் புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 14.90 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தைப் பங்கு 23 சதவீதமாக உள்ளது.
ஐடியா
ஐடியா செல்லுலார் நிறுவனம் 25 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. 16.8 சதவீத சந்தைப் பங்களிப்பை கொண்டுள்ள இந்நிறுவன வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 11 கோடியாக அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் இந்நிறுவனம்தான் அதிகபட்ச புதிய இணைப்புகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புதியவர்களை ஈர்ப்பதில் இந்நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
யூனிநார்
அடுத்தபடியாக யூனிநார் நிறுவனம் அதிகபட்சமாக 23 லட்சம் புதியவர்களை ஈர்த்துள்ளது. பிப்ரவரி மாத நிலவரப்படி இந்நிறுவன வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 4.11 கோடியை எட்டியுள்ளது. அனைத்து உரிமங்களையும் இழந்துள்ள நிலையில் தற்போதைய பங்குதாரரான யூனிடெக்கை விலக்கி விட்டு இந்திய செயல்பாடுகளுக்கான முற்றிலும் ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கப் போவதாக இந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. மற்றொரு புதிய நிறுவனமான வீடியோகானின் புதிய வாடிக்கையாளர் எண்ணிக்கை 5.9 சதவீதம் வளர்ச்சி கண்டு 61.90 லட்சமாக உயர்ந்துள்ளது.
2011 மார்ச் மாதத்திலிருந்து ஜி.எஸ்.எம். செல்போன் சேவையில் புதிய இணைப்புகளின் வளர்ச்சி விகிதம் சரிவடைந்து கொண்டே வந்தது. அவ்வாண்டு ஆகஸ்டு மாதத்தில் புதிய இணைப்புகளின் எண்ணிக்கை 53.30 லட்சமாக இருந்தது. செப்டம்பரில் நிலைமை மாறியது. அம்மாதத்தில் இணைந்த புதிய வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 65.20 லட்சமாக உயர்ந்தது. இது அக்டோபர் மாதத்தில் 71.20 லட்சமாக அதிகரித்து, நவம்பர் மாதத்தில் 66.70 லட்சமாக குறைந்தது. டிசம்பர் மாதத்தில் மீண்டும் எழுச்சி ஏற்பட்டது. அம்மாதத்தில் மொத்தம் 75.50 லட்சம் புதிய ஜி.எஸ்.எம். இணைப்புகள் வழங்கப்பட்டன. ஜனவரியில் இந்த எண்ணிக்கை 84.40 லட்சமாக உயர்ந்து, பிப்ரவரியில் 87.70 லட்சமாக அதிகரித்துள்ளது.
எங்கு அதிகம்?
நம் நாட்டில் கிழக்கு உத்தரபிரதேசம்தான் அதிகபட்சமாக 5.55 கோடி ஜி.எஸ்.எம். சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. எனினும் பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில்தான் புதிய வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஈர்க்கப்பட்டுள்ளனர். அங்கு 10 லட்சத்திற்கும் அதிகமான அளவில் புதிய ஜி.எஸ்.எம். இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது, அம்மாதத்தில் வழங்கப்பட்ட மொத்த புதிய இணைப்புகளில் 11.42 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.