நெல்லை-தென்காசி அகல பாதையி்ல் 26ந் தேதி ரயில் சோதனை ஓட்டம்
திருநெல்வேலி: நெல்லை-தென்காசி அகல ரயில் பாதையில் வரும் 26ந் தேதி சோதனை ஓட்ட ரயில் இயக்கப்படவுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது..
நெல்லை-தென்காசி
நெல்லை-தென்காசி மீட்டர்கேஜ் பாதையில் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து 220 கோடி ரூபாயில் நெல்லை-தென்காசி இடையேயான 72 கிமீ தூரமுள்ள மீட்டர்கேஜ் பாதை அகல பாதையாக மாற்றும பணி கடந்த மூன்று ஆண்டாக நடைபெற்று வந்தது. இதில் பெரிய மற்றும் சிறிய பாலங்கள், லெவல் கிராசிங், ஸ்டேஷன்களில் அடிப்படை வசதி, சிக்னல்கள், தண்டவாள பேக்கிங், உள்பட பல்வேறு பணிகள் நடந்தன. இதனையடுத்து கடந்த பிப்ரவரியில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் கோயல் ஆய்வு செய்தார். அப்போது சிறிய, பெரிய தவறுகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த 5ந் தேதி நெல்லை-தென்காசி அகல ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அது திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே வரும் 26ந் தேதி நெல்லை-தென்காசி அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதனால் இந்த ரயில் பாதையில் செல்ல கூடிய பொதுமக்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் 26ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தண்டவாளத்திற்கு அருகே செல்வதை தவிர்க வேண்டும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது