டெல்லி இஸ்ரேல் தூதரக கார் குண்டு தாக்குதல்: 4 ஈரானியர்களுக்கு எதிராக இண்டர்போல் நோட்டீஸ்
டெல்லி: டெல்லியில் இஸ்ரேல் தூதரக காரில் காந்த ஸ்டிக்கர் வெடிகுண்டு பொருத்தி தாக்குதல் நடத்திய வழக்கில் ஈரான் நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு எதிராக இண்டர்போல் மூலம் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களான முகம்மர்ஜா அபோல்கஸ்மி, ஹெளசங் அப்ஷர் ஈரானி, சையத் அலி மக்தின்சார் மற்றும் மசூத் ஆகியோருக்கு எதிராக இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இண்டர்போல் செயலாளர் ரொனால்டு கே நோபல், சந்தேக நபர்களை பிடிப்பதில் சிரமம் இருப்பதாகக் கூறி ரெட் நோட்டீஸ் விடுக்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டது என்றார்.
கடந்த பிப்ரவரி 13-ந் தேதியன்று டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தின் கார் மீது காந்த ஸ்டிக்கர் வெடிகுண்டு பொருத்தி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து இத்தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக டெல்லி பத்திரிகையாளர் ஹஸ்மி கைது செய்யப்பட்டார். பின்னர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பிடிபட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்தவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லி தாக்குதலில் ஈடுபட்ட ஈரான் நாட்டவர் அனைவரும் மலேசியா வழியாக தப்பிச் சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் டெல்லி தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக இண்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.