இத்தாலியர்களை விடுவிக்க மாவோயிஸ்டு தூதர்களுடன் அரசு 2-வது நாளாக பேச்சுவார்த்தை
கந்தமால்: கடத்திச் செல்லப்பட்டுள்ள 2 இத்தாலியர்களை விடுவிப்பது தொடர்பாக மாவோயிஸ்டுகளின் தூதர்களுடன் இன்று 2-ம் நாளாக ஒரிசா அரசாங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையை நடத்த உள்ளது..
மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டிருந்த தூதர்களான பி.டி.சர்மா மற்றும் தண்டபாணி மொகந்தி ஆகியோருடன் தலைநகர் புவனேஸ்வரில் அரசு சார்பில் மூவரடங்கிய குழு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
முதல் நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கருத்து தெரிவித்த தண்டபாணி மொகந்தி, கடத்தப்ப்ட்ட இத்தாலியர்கள் இருவரும் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து 2- வது நாளாக இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
சிறையில் உள்ள மாவோயிஸ்ட் தலைவர்களில் சிலரை விடுவித்தால் அனேகமாக கடத்தப்பட்ட ஒரு இத்தாலியரையாவது மாவோயிஸ்டுகள் விடுவிக்க முன்வருவர் என்று தெரிகிறது.
ஒரிசா சட்டப்பேரவையில்....
இதனிடைய கடத்தப்பட்ட இத்தாலியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஒரிசா சட்டப்பேரவையில் மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார். இதனை வலியுறுத்தி ஒரிசா சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பீகாரில் தாக்குதல்
இதனிடையே பீகாரில் தலைநகர் பாட்னாவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் மாவோயிஸ்டுகள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். பாலம் ஒன்றை தகர்த்து 6 சரக்கு வாகனங்களை தீயிட்டு எரித்துள்ளனர்.
பீகாரில் தங்களுக்கு எதிராக தொடரும் தேடுதல் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் சிறையில் உள்ள மாவோயிஸ்டு தலைவர்களை விடுதலை செய்யக் கோரியும் இத்தாக்குதலை நடத்தியதாக மாவோயிஸ்டுகள் போஸ்டர்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.