கூடங்குளம் போராட்டத்துக்கு உதவும் என்ஜிஓக்கள் மீது தொடர்ந்து விசாரணை: நாராயணசாமி
கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக மாநிலங்களவையில் நாராயணசாமி கூறியதாவது:
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு சில தொண்டு நிறுவனங்கள் உதவி அளித்தது பற்றிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விசாரணை இன்னும் முடியாத நிலையில் எதிர்ப்பாளர்களுக்கு உதவி அளித்த தொண்டு நிறுவனங்கள் எவை என்பது பற்றிய தகவல்களை இப்போது வெளியிட முடியாது.
சில தொண்டு நிறுவனங்களின் வரவு-செலவு கணக்குகள் சரியாக இல்லை. அவை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில் 2 தொண்டு நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு உள்ளது. மேலும் 2 குற்றவழக்குகளை தொண்டு நிறுவனங்கள் மீது தமிழக போலீசார் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
உள்துறை கண்காணிப்பு
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு உதவிய தொண்டு நிறுவனங்கள் பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக விசாரணை நடத்தி அதன் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருகிறது. இந்த பிரச்சினையில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்து உள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு 4 தொண்டு நிறுவனங்கள் உதவி அளித்து இருப்பதாக அடையாளம் காணப்பட்டு உள்ளது. அதுபற்றியும் விசாரணை நடக்கிறது. கூடங்குளத்தை முடக்க சில சக்திகள் ஈடுபட்டுள்ளன. அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாதுகாப்பு வளையம்
கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ளது. கூடங்குளத்தை சுற்றி 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஆனாலும் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர்கள் தேசத்துக்கு எதிராக உள்ளார்கள்.
கூடங்குளம் அணுமின் நிலைய பணிகளை துரிதமாக மேற்கொண்டு, அதனை திறக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பிரச்சினையில் சரியான நடவடிக்கை எடுத்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கூடங்குளம் பிரச்சினையில் மத்திய அரசுடன் அவர் இணைந்து செயல்படுகிறார்.
தொண்டு நிறுவனங்கள் மீது வந்த புகார்கள் அடிப்படையில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கை வழக்கமானது தான். இது வேண்டுமென்றே யார் மீதும் எடுக்கும் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்றார் அவர்..