அதிமுக வெற்றிக்கு திமுகவின் திருமங்கலம் பார்முலா உதவியுள்ளது-தா.பா.
திருச்சியில் இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூடங்குளம் விஷயத்தில் அரசின் முடிவு சரியானது. மாநிலத்தில் நிலவும் மின்வெட்டை தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்ட முடிவாகும். ஆனால், போராட்டக் குழுவினர் தெரிவித்து வரும் அச்சத்துக்கும் நியாயமான காரணம் உள்ளது.
இதுவரை வெளியான, 12 ஐந்தாண்டு திட்டங்களிலும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்படவில்லை. தமிழகத்தில் கடந்த மூன்றாண்டில், ஏழரை லட்சம் ஏக்கர் விளை நிலம் கட்டடமாக மாறியுள்ளது. இந்த நிலை, எதிர்காலத்தில் இந்தியாவுக்கு மாபெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
அ.தி.மு.க. - தி.மு.க. சம பலத்துடன் சங்கரன்கோவிலில் தேர்தல் பணியாற்றியது. இதில் செல்வமுள்ள கட்சியாக தி.மு.க. இருந்தது. அந்த கட்சியிடம் போட்டி அரசாங்கம் நடத்தும் அளவுக்கு பணம் இருந்தது.
தி.மு.க. விதைத்த திருமங்கலம் பார்முலா என்ற விதையை, தற்போது அ.தி.மு.க. சங்கரன்கோவிலில் அறுவடை செய்துள்ளது.
நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்ற காரணத்துக்காகத் தான் மக்கள், அ.தி.மு.க.-வை ஆதரித்துள்ளனர். மத்திய ஆட்சியில் நல்ல தலைமை இல்லை. அதனால் தான், மத்திய அமைச்சரை மாநில முதல்வர் நியமிக்கிறார் என்றார்.