பல கோடியில் நவீனமயமாகிறது தமிழக காவல்துறை: ஜெ. உத்தரவு
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
புதிய வேலை வாய்ப்புகள்
சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு துறைக்கு கூடுதல் பணியாளர்கள் தேவை என்ற காவல்துறையின் கோரிக்கையினை ஏற்று 119 புதிய பணியிடங்களை தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு தொடர் செலவினமாக 5 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 769 ரூபாயும், தொடரா செலவினமாக 86 லட்சத்து 61 ஆயிரத்து 335 ரூபாயும் ஒதுக்கப்படுகிறது.
அடிப்படை கட்டமைப்பு வசதி
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திற்கு புதிய கட்டடம் கட்ட தஞ்சாவூரிலுள்ள தமிழ் பல்கலைக் கழகத்துக்கு அருகில் 4 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக விழாக்காலங்களில் காவல் பணிகளை மேற்கொள்ளும் காவலர்கள் நலன் கருதி, 11 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் 500 காவலர்கள் தங்குவதற்கான அளவில் படை குடியிருப்புகள் கட்டுவதற்கு, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அறிவியல் பிரிவு
காவல் துறையின் குற்றப்பிரிவு கீழ் இயங்கும் குற்றப் புலனாய்வுத் துறையில் அறிவியல் பிரிவு ஒன்றினைத் துவக்க தமிழக ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பிரிவில் அறிவியல் அதிகாரி மற்றும் அறிவியல் உதவியாளர் ஆகிய இரு பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இவர்கள், வழக்கின் முக்கியமான அம்சமான அறிவியல் சம்பந்தப்பட்ட குறிப்புகளை ஆராய்ந்து குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிக்கை அளிப்பார்.
ஆயுதப்படை மற்றும் சிறப்புக் காவல்படையில் புதியதாக பணியமர்த்தப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு, காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் பணியாற்றக்கூடிய வகையில் நுட்பமான பயிற்சியை அளிக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இடையில் கால அளவு குறைக்கப்பட்ட பயிற்சியினை மீண்டும் முன்பு இருந்தது போல் காவலர் உயர்ரக பயிற்சி பள்ளியில் 7 மாதங்கள் பயிற்சி அளிப்பதற்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கணினி, கட்டமைப்பு
காவல்துறையின் பணி சிறக்க, காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு 245 கணினிகள், மாவட்ட தலைமை காவல் அலுவலகங்களுக்கு 330 கணினிகள், சரக அலுவலகங்களுக்கு 60 கணினிகள், மண்டல அலுவலகங்களுக்கு 16 கணினிகள், மாநகர காவல் அலுவலகங்களுக்கு 70 கணினிகள், ஆயுதப்படை தலைமை அலுவலகங்களுக்கு 5 கணினிகள், ஆயுதப்படை சரக அலுவலகங்களுக்கு 10 கணினிகள், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு 64 கணினிகள், காவல்துறை சிறப்பு பிரிவுகளுக்கு 100 கணினிகள், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு 100 கணினிகள், என மொத்தம் 5 கோடி ரூபாய் செலவில் 1000 கணினிகள் வாங்குவதற்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே முன் மாதிரியாக தமிழகத்திலுள்ள 1492 காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் அமர்வதற்காக காவல் நிலையம் ஒன்றுக்கு 10 PVC நாற்காலிகள் வீதம் வாங்குவதற்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த வகையில் அரசுக்கு 92 லட்சத்து 20 ஆயிரத்து 560 ரூபாய் செலவினம் ஏற்படும் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.