பிரதமரை விமர்சித்துவிட்டு இப்போது நன்றி கூறுவதா?: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி எதிர்ப்பு
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜெயலலிதா வருத்தம்
20-3-2012 தேதிய இதழ்களில் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட நீண்ட அறிக்கையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் கூறியதை பற்றி,ஒரு மழுப்பலான பயனில்லாத ஒரு பதில் என்றும், 'கருணாநிதியின் கபட நாடகத்திற்கு பிரதமரே துணைபோகும் வகையில் இலங்கை அரசின் மனித
உரிமை மீறல் பற்றி எதையுமே குறிப்பிடாமல், தெளிவற்ற ஒரு பதிலை கூறியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இப்போது நன்றியா?
இவ்வாறு அறிக்கை விடுத்த அதே ஜெயலலிதா மூன்றே நாட்களில் இன்று ஏடுகளில் விடுத்துள்ள அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு கொடுத்தமைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்து நீண்டதோர் அறிக்கை விடுத்துள்ளார். 20-ஆம் தேதி பிரதமரை வசை பாடியதும் இதே ஜெயலலிதாதான். 23ஆம் தேதி பிரதமருக்கு
நன்றி கூறியிருப்பதும் இதே ஜெயலலிதாதான்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்த கருத்துப் பற்றி அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா தேவையில்லாமல் அந்த அறிக்கையிலே என்னையும் இழுத்து நான் 'கபட நாடகம்' போடுவதாகச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது?
கபட நாடகம்?
இலங்கையிலே நடைபெற்ற இறுதிப் போரில் இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்துக் கொண்டிருந்தபோது, 17-1-2009 அன்று இதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையிலே என்ன சொன்னார்? 'இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ண வில்லை. போர் என்றால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம்தான்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மத்தியிலே எழுந்துள்ளது. இலங்கையில் நடக்கும் உள் நாட்டுப்போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்று ஜெயலலிதா சொல்லவில்லையா?
அதையெல்லாம் அப்படியே மறைத்துவிட்டு, இப்போது இலங்கைத் தமிழர்களைக் கொன்றதற்காக அமெரிக்காவின் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென்று கடிதம் எழுதினால், அறிக்கை விடுத்தால் அதற்குப் பெயர் தானே கபட நாடகம்? என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.