சசிகலாவின் கணவர் நடராஜன் மீது மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கு
தஞ்சாவூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழியான சசிகலாவின் கணவர் நடராஜன் மீது மற்றொரு நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தஞ்சாவூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தஞ்சாவூர், தமிழ் நகர் ஏழாவது தெருவை சேர்ந்தவர் சகுந்தலா. இவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி போலீசில், நேற்று புகார் மனு கொடுத்தார்.
அம்மனுவில் சகுந்தலா கூறியிருந்ததாவது:
2011 நவம்பர் 6ம் தேதியன்று, நடராஜன் தரப்பைச் சேர்ந்த அவருடைய நண்பரும், பினாமியுமான தஞ்சை காவேரி நகர் ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் மற்றும் அடையாளம் தெரியாத ஐந்து பேர், என் வீட்டுக்குள் அடியாட்களுடன் நுழைந்தனர்.
தொடர்ந்து, வீட்டை காலி செய்யுமாறு கூறி, எனக்கு மிரட்டல் விடுத்தனர். ஜே.சி.பி., இயந்திரம் மூலம் வீட்டை சேதப்படுத்தி, அபகரித்துக் கொண்டனர். இவ்விவகாரத்தில், நடராஜன் உள்ளிட்ட ஏழு பேர் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு சொந்தமான வீட்டை மீட்டுத் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இப்புகாரின்படி, நில அபகரிப்பு பிரிவின் கீழ், சசிகலா கணவர் நடராஜன், அவருடைய பினாமி காவேரி நகர் ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் மற்றும் அடையாளம் தெரியாத மேலும் ஐந்து பேர் என, மொத்தம் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், காவேரி நகரில் இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமாரை, நேற்று மாலை கைது செய்து, தஞ்சாவூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க, போலீசாருக்கு மாஜிஸ்திரேட் முருகன் உத்தரவிட்டார்.