தெலுங்கானா மாநிலம் கோரி ஆந்திரப் பேரவையில் கடும் அமளி
ஐதராபாத்: தெலுங்கானா தனிமாநிலம் கோரி ஆந்திர பிரதேச சட்டப் பேரவையில் தெலுங்கானா எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
3 நாள் விடுமுறைக்கு பிறகு ஆந்திர பேரவை இன்று மீண்டும் கூடியது. அப்போது இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 எம்.எ.ல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மற்றும் தெலுங்கானா பகுதியை சேர்ந்த தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் நடேன்லா மனோகர் இருக்கைக்கு அருகே சென்று தனி தெலுங்கானா கோரி முழக்கங்களை எழுப்பினர்.
தெலுங்கானா தனி மாநிலம் குறித்த தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். இதனால் பேரவையில் கடும் கூச்சலும் அமளியும் நிலவியது.
இதை தொடர்ந்து அவையை 15 நிமிடங்கள் சபாநாயகர் ஒத்திவைத்தார். இருந்தும் அவர்கள் அவைக்குள்ளேயே இருந்து தொடர்ந்து ஒரு மணி நேரம் முழக்கங்களை எழுப்பியபடியே இருந்தனர்.
இதனால் இன்று நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் நடேன்லா மனோகர் அறிவித்தார்.