தெலுங்கானாவுக்கான தொடரும் தீக்குளிப்பு சம்பவங்கள் முழு அடைப்புக்கு அழைப்பு
வாரங்கல்: தனி தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி வாரங்கல் மாவட்டத்தில் மாணவர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ராஜாமௌலி (30) என்ற ஆட்டோ ஓட்டுநர், ஹனம்கொண்டா பகுதியில் உள்ள பூங்காவில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதேபோல் மகபூப் நகர் மாவட்டத்தில் வனபர்தி என்ற இடத்தில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதில் படுகாயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடரும் தீக்குளிப்பு சம்பவங்களால் தெலுங்கானாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் மீண்டும் முழு அடைப்புப் போராட்டம் நடத்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அழைப்பு விடுத்துள்ளது.
தெலுங்கானா தனிமாநிலம் கோரி இதுவரை நூற்றுக்கணக்கானோர் குறிப்பாக மாணவர்கள் தங்களைத் தியாகம் செய்திருப்பதாக தெலுங்கானா அமைப்புகள் தெரிவித்து வருகின்றன,