மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட இத்தாலியர்களில் ஒருவர் விடுவிப்பு: எம்.எல்.ஏ. கதி என்ன?
புவனேஸ்வர்: மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட 2 இத்தாலியர்களில் ஒருவர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் கடந்த 24ம் தேதி கடத்தப்பட்ட பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ. பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
ஒடிசா மாநிலத்திற்கு சுற்றுலா வந்திருந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிளாடியோ கொலாஞ்செலோ (61), போலோ போசுஸ்கோ(54) ஆகிய 2 பேரை கந்தமால் மாவட்ட வனப்பகுதியில் வைத்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கடந்த 14ம் தேதி கடத்திச் சென்றனர். இந்நிலையில் கடந்த 24ம் தேதி கோராபுட் மாவட்டம் தோயாபுட் பகுதியில் லஷ்மிபூர் எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகா(37) (பிஜு ஜனதா தளம்) மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். இதில் கொலாஞ்செலோ மட்டும் நேற்று விடுவிக்கப்பட்டார். ஆனால் எம்.எல்.ஏ.வின் கதி என்ன என்று தெரியவில்லை.
கஞ்சம் மற்றும் கந்தமால் மாவட்டங்களின் எல்லையில் பெயர் தெரியாத இடத்தில் மாவோயிஸ்ட்கள் கொலாஞ்சலோவை பத்திரிக்கையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
விடுவிக்கப்பட்ட கொலாஞ்சலோ கூறுகையில், மாவோயிஸ்ட்கள் கடத்தியால் மிகவும் அச்சத்துடன் இருந்தேன். பழங்குடியினப் பெண்கள் குளித்ததை புகைப்படம் எடுத்ததால் தான் மாவோயிஸ்ட்கள் எங்களை கடத்தினார்கள் என்ற செய்தி தவறு. நானும், போலோவும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது 4 பேர் வந்து எங்களை கடத்தினர். அவர்கள் எங்களை துன்புறுத்தவில்லை மாறாக நன்றாக கவனித்துக் கொண்டனர். நான் விடுதலை ஆனது போன்று போலோவும் விடுதலையாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.
வனப்பகுதிக்குள் செல்லக் கூடாது என்று போலீசார் தடுத்தும் நீங்கள் இருவரும் அத்துமீறி சென்றதாகக் கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, போலீசாரிடம் அனுமதி பெற்ற பிறகே வனப்பகுதிக்குள் சென்றோம் என்றார்.
கொலாஞ்சலோவை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ததாக மாவோயிஸ்டுகளின் உயர்நிலைக் குழுத் தலைவர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்தார்.
இது குறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கூறுகையில், எம்.எல்.ஏ.வை கடத்தியவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க விரைவில் எங்களைத் தொடர்பு கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதன் பிறகு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எம்.எல்.ஏ.வை மீட்போம் என்றார்.