பியாந்த்சிங் வழக்கு: ரஜோனாவின் தூக்கை நிறுத்த குடியரசுத் தலைவரிடம் மனு
சண்டிகர்: பியாந்த்சிங் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பல்வந்த்சிங் ரஜோனாவின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி சார்பில் கருணை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வராக இருந்த பியாந்த்சிங் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோரில் பல்வந்த்சிங் ரஜோனாவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மார்ச் 31-ந் தேதி பாட்டியாலா சிறையில் அவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
ஆனால் சட்டப்படி பாட்டியாலா சிறையில் ரஜோனாவை தூக்கிலிட முடியாது என்று நீதிமன்றத்துக்கு சிறைக் கண்காணிப்பாளர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் சீக்கியர்களின் உயரிய மத அமைப்பான அகால் தத்தும் ரஜோனாவின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
மேலும் பஞ்சாப் முதல்வர் மற்றும் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் கருணை மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்பு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி சார்பில் ரஜோனாவுக்காக ஆளுநர் சிவ்ராஜ் பாட்டீலிடம் கருணை மனு கொடுக்கப்பட்டு அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. ரஜோனாவை தூக்கிலிடுவது சீக்கியர்களை உணர்வுகளை காயப்படுத்தும் செயல் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ரஜோனாவின் தூக்கை ரத்து செய்யக் கோரி பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நாளை மறுநாள் பஞ்சாப் மாநிலம் முழுவதும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.