+2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 2ல் துவக்கம்
சென்னை: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி துவங்கி அந்த மாத இறுதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 8ம் தேதி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு 8.2 லட்சம் மாணவ-மாணவியர் பொதுத்தேர்வை எழுதி வருகின்றனர். இந்நிலையில் வரும் 30ம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைகின்றன. இதையடுத்து வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் அம்மாத இறுதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 47 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விடைத்தாள் திருத்தும் பணியில் 20,000க்கும் அதிகமான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும், 2,000க்கும் அதிகமான ஆசிரியரல்லாத பணியாளர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மொழிப்பாடம், ஆங்கிலம், வணிகவியல் போன்ற முக்கியத்துவம் குறைந்த பாடங்களின் விடைத்தாள்கள் வரும் ஏப்ரல் 2ம் தேதி முதலும், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களின் விடைத்தாள்கள் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதலும் திருத்தப்படுகின்றன என்று கூறப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொறியியல், மருத்துவப் படிப்புகளில் சேரத் தேவையான பாடங்களான இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் அறிவியல் ஆகிய பாடங்களின் வினாத்தாள்களுக்கு டம்மி எண் வழங்கும் பணி நாளை முதல் துவங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பாடங்களின் வினாத்தாள்கள் மாவட்டந்தோறும் சேகரிக்கப்பட்டு டம்மி எண் வழங்கும் மையங்களுக்கு கொண்டுவரப்படும். அங்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் உதவியோடு டம்மி எண் வழங்கப்பட்டு விடைத்தாள்கள் வெவ்வேறு ஊர்களுக்கு ரகசியமாக அனுப்பி வைக்கப்படும். விடைத்தாள்கள் திருத்தப்பட்டவுடன் டம்மி எண்ணை வைத்து கம்ப்யூட்டர் மூலம் உரிய பதிவெண்தாரர்கள் கண்டறியப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும்.
இயற்பியல் பாட வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா என்று அதிகாரிகளிடம் கேட்டதற்கு, புத்தகத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதால் கூடுதல் மதிப்பெண்கள் கொடுக்கப்படமாட்டாது என்றனர்.