ஜெயலலிதாவுக்கே இந்த பட்ஜெட் மீது நம்பிக்கை இல்லை-ஸ்டாலின்: திமுக வெளிநடப்பு
சென்னை: சட்டசபை மரபை மீறி பட்ஜெட்டுக்கு முன்பாகவே புதிய அறிவிப்புகளை அதிமுக அரசு வெளியிட்டதற்குக் கண்டனம் தெரிவித்து திமுக இன்று சட்டசபையில் வெளிநடப்புச் செய்தது.
தமிழக சட்டசபை இன்று காலை தொடங்கியதும், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பட்ஜெட் தாக்கல் செய்யுமாறு சபாநாயகர் ஜெயக்குமார் கூறினார்.
அப்போது சட்டமன்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தேமுதிக சட்டமன்ற துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் எழுந்து பேசத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களுக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படவில்லை.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் நீங்கள் பேசுவது எதுவும் அவைக்குறிப்பில் இடம் பெறாது என்றார்.
அப்போது பேசிய ஸ்டாலின், சட்டசபை மரபுகளை மீறி, பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பே புதிய திட்டங்களை, அறிவிப்புளை அரசு வெளியிட்டுள்ளது. இதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்வதாக கூறினார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
தேமுதிகவினர் அவையிலேயே இருந்தனர்.
வெளிநடப்பு செய்த பிறகு மு.க.ஸ்டாலின் சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் கூறுகையில்,
முன்பெல்லாம் பட்ஜெட் என்றால் ரகசியம் என்பார்கள். இப்போது பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பாகவே அவை மரபுகளுக்கு மாறாக முதல்வரே அரசின் திட்டங்களை எல்லாம் அவரே அறிவித்து விடுகிறார்.
உதாரணமாக இன்று பட்ஜெட் என்றால் 24ம் தேதிய நாளிதழ்களில் முதல்வர் அறிவித்ததாக பல்வேறு திட்டங்கள் வருகிறது. காவல்துறையை அதிநவீனமையமாக்க ரூ.34 கோடிக்கு முன்னோடி திட்டங்கள், போடியில் ரூ.94 கோடியில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி என்பது போன்ற அறிவிப்புகளை முதல்வரே செய்து விட்டபிறகு அவருக்கே இந்த நிதிநிலை அறிக்கையின் மீது நம்பிக்கை இல்லை என்ற அளவில் எங்களுக்கும் நம்பிக்கை இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என்றார்.