போலி நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ.8 லட்சம் மோசடி
நெல்லை: மேலப்பாளையத்தி்ல் போலி நகைகள் மூலம் வங்கியில் ரூ.8 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலப்பாளையத்தில் உள்ள ஐஓபி வங்கியில் அப்பகுதியைச் சேர்ந்த பலரும் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். இவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த வெங்கிடாசலம் என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் தனது தாய் மற்றும் உறவினர் பெயரில் தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை நகைகளை அடகு வைத்து ரூ.8 லட்சம் பெற்றுள்ளார். நகை மதிப்பீட்டாளராக அவர் பணி புரிந்ததால் தன் உறவினர்களின் போலி நகைகளை தங்க நகைகள் என கூறி எளிதாக கடன் வாங்கி கொடுத்து விட்டார்.
இது குறித்து வங்கி நிர்வாகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து சில புகார்கள் வரத் தொடங்கின. இந்நிலையில் வங்கியில் கடந்த 17ம் தேதி நடந்த தணிக்கையில் போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்யப்பட்டது உண்மை என கண்டறியப்பட்டது. இது குறித்து வங்கி மேலாளர் பாளையில் உள்ள மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். நகைகளுக்குரிய பணத்தை மீட்க ஏற்பாடு செய்துவிட்டதாகவும், வங்கிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.